சென்னை: நடப்பாண்டு பிஇ., பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்துள்ளது. பி.இ, பிடெக், பி.ஆர்க் படிப்புகளில் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மே 3ம் தேதி தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதலே ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வரும் நிலையில் நேற்றைய தினம் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2,06,586. அவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பத்திற்கான கட்டணத்தையும், 89 ஆயிரத்து 397 பேர் சான்றிதழ்களையும் சமர்ப்பித்துள்ளனர். ஜீன் 2ம் தேதி விண்ணப்ப பதிவு நிறைவடையும், அசல் சான்றிதழ்களை ஜூன் 6ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 5ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனைத்தொடர்ந்து ஜூன் 29ம் தேதி இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
