வேட்புமனுவில் ஒன்று.. விளம்பரங்களில் ஒன்று.. என்னதான்யா படிச்சீங்க..! கேள்விக்குள்ளாகும் தவெக எம்எல்ஏக்களின் கல்வித்தகுதி

 

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தவெக சார்பில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் கல்வித் தகுதியுடையவர்கள் எனப் பதிவிட்டு வந்தனர். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர் தங்களின் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் கல்வித்தகுதி தொடர்பான தகவல், அவர்கள் தேர்தல் பரப்புரையின்போது விளம்பரப்படுத்துவது இரண்டும் முரணாக உள்ளது என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இந்தச்சூழலில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகுதி தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. அந்த நிறுவனம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், தவெகவினரின் பொய்கள் அம்பலப்படுகிறது. இந்நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகுதி தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

* பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அடுத்த மாதம் தனது அம்மாவின் வீட்டிற்கு வாடகை கூடச் செலுத்த முடியாத ஒருவரை முதல்வர் விஜய் அமைச்சராக ஆக்கியுள்ளார் என்று பேட்டியில் கூறினார். ஆனால், அவர் சில மாதங்களுக்கு முன்னர் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொகுசு வீடு வாங்கியபோது அவர் எடுத்த காணொளியைத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவரின் கல்வித் தகுதியும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அவர் தனது வேட்புமனுவில் 2010ம் ஆண்டு இந்திய வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வணிக மேலாண்மை பட்டயப் படிப்பு முடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனம் எந்த அரசு அமைப்பாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

* தவெக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் பிபிஏ மட்டுமே படித்துள்ளதாகத் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் தேர்தல் பரப்புரையின்போது எம்பிஏ படித்துள்ளதாக விளம்பரப்படுத்தியுள்ளார்.

* பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள தஞ்சாவூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் பிபிஏ பட்டம் பெற்றதாகப் பொய்யாகப் பரப்புரை செய்துள்ளார்.

* தவெக ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் குமார் பிபிஏ மட்டுமே படித்துள்ளதாக வேட்புமனுவில் கூறியுள்ளார். ஆனால், பரப்புரையின்போது ‘டாக்டர்’ என விளம்பரப்படுத்தியுள்ளார். அவரிடம் மருத்துவ அல்லது முனைவர் பட்டம் இல்லாத நிலையில், போஸ்டரில் ‘டாக்டர்’ எனப் போலிப் பட்டத்தைப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* தவெக விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ மட்டுமே படித்துள்ளார் என்று அவரது தேர்தல் வேட்புமனு காட்டுகிறது. ஆனால், அவர் பரப்புரையின்போது ‘டாக்டர்’ எனத் தெரிவித்துள்ளார். அவரிடம் மருத்துவ அல்லது முனைவர் பட்டம் இல்லாத நிலையில், போஸ்டரில் ‘டாக்டர்’ எனப் போலிப் பட்டத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

* குமாரபாளையம் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி தனது தேர்தல் வேட்புமனுவில் 12ம் வகுப்பு மட்டுமே கல்வித் தகுதியாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், தேர்தல் பரப்புரையின் போது தன்னைப் பட்டதாரி என விளம்பரப்படுத்தியுள்ளார்.

* போளூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், தான் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்துள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ள நிலையில், அவர் விளம்பரங்களில் எம்பிஏ படித்துள்ளதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* தவெக அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் 10ம் வகுப்பு மற்றும் ‘ஏடிசிஏ’ கணினி சான்றிதழ் படிப்பு மட்டுமே முடித்துள்ளார் என்று அவரது வேட்புமனுவில் கூறியுள்ளார். ஆனால், தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகளை முடித்துள்ளதாக விளம்பரப்படுத்தியுள்ளார். இந்தத் தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும் நெட்டிசன்கள் தங்களின் உண்மையான கல்வித்தகுதியைச் சொல்லாமல் பொய்யான தகவல்களைச் சொல்லிப் பதவிக்கு வந்துள்ள இவர்கள் எப்படி நேர்மையான மாற்றத்தைக் கொடுப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பிவருகிறார்கள்.

Related Stories: