ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

 

கடலூர், மே 19: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வாலிபர் ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே அவரிடமிருந்து பெட்ரோல் கேனை பிடிங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். விசாரணையில், அவர் பண்ருட்டி அருகே ரெட்டிபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் விக்னேஷ்(23) என்பதும், இவரது நிலத்தை உறவினர் ஒருவர் சொந்தமாக பட்டா வாங்கி கொண்டதால், இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார்.

ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விக்னேஷ் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் அவரை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: