டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு நடந்த 62வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் எடுத்தது. அதிகபட்சமாக துருவ் ஜூரல் 53, கேப்டன் ரியான் பராக் 51, சூர்யவன்ஷி 46 ரன் அடித்தனர். டெல்லி பவுலிங்கில் மிட்செல் ஸ்டார்க் 4, லுங்கி நிகிடி, மாதவ் திவாரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களம் இறங்கிய டெல்லி அணியில் அபிஷேக் போரல் 51, கே.எல்.ராகுல் 56, கேப்டன் அக்சர் பட்டேல் நாட்அவுட்டாக 34 ரன் விளாசினர். 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன் எடுத்த டெல்லி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார். 13வது போட்டியில் டெல்லி 6வது வெற்றிபெற்றது. ராஜஸ்தான் 6வது தோல்வியை சந்தித்தது. நடப்பு சீசனில் 2 முறையும் ராஜஸ்தானை டெல்லி வீழ்த்தி உள்ளது.
வெற்றிக்கு பின் டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் கூறியதாவது:
தொடர் தோல்விக்குப் பிறகு சொந்த மண்ணில் வெற்றி பெறுவது நிச்சயமாக ஒரு சிறப்பான விஷயம். ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வருகிறார்கள், எனவே இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இன்று ஒரு நல்ல தொடக்க ஜோடி அமைந்தது மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் உதவியது. இந்த விஷயத்தில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே எங்களால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. பல போட்டிகளில், பவர்பிளேக்குப் பிறகு நாங்கள் மீண்டு வந்து சிறப்பாகப் பந்துவீசியுள்ளோம். இன்றும்கூட மிடில் ஓவர்களில் அதைச் செய்தோம். இன்று எங்கள் இளம்வீரர் (ஸ்டார்க்) எங்களுக்காக அதைச் செய்தார், என்றார்.
சொந்த மண்ணில் வெற்றியுடன் முடிப்பது எப்போதுமே மகிழ்ச்சி;
ஆட்டநாயகன் ஸ்டார்க் கூறியதாவது: பவர்பிளேயில் நாங்கள் அவ்வளவு மோசமாகப் பந்துவீசவில்லை, ஆனால் ராஜஸ்தான் வீரர்கள் நன்றாக பேட் செய்தனர். இருப்பினும், நாங்கள் பின்னர் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம். எங்கள் வீரர்கள் அற்புதமாக பேட் செய்தனர். சொந்த மண்ணில் வெற்றியுடன் முடிப்பது எப்போதுமே மகிழ்ச்சி. லுங்கி மிகவும் நன்றாகப் பந்துவீசினார். பவர்பிளேக்குப் பிறகு நாங்கள் மிகச் சிறப்பாக சூழ்நிலைக்கு ஏற்ப மாறினோம். எங்கள் அணியில் ஏராளமான திறமைசாலிகள் உள்ளனர், என்றார்.
210 ரன் எடுத்திருக்க வேண்டும்!
ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது: 14 ஓவர் வரை நல்ல நிலையில் இருந்தோம். நான் ஆட்டமிழந்த பிறகு, நிலை மாறியது. 210 ரன் எடுத்திருக்க வேண்டும். எங்கள் பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கோப்பையை வெல்ல விரும்பினால், ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாகப் போராட வேண்டும்.. இப்படி விளையாடினால், முதல் 4 இடங்களுக்குள் வரமுடியாது. எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது, நாங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை, என்றார்.
பிட்ஸ்… பிட்ஸ்…
* நடப்பு சீசனில் ராஜஸ்தான் முதல் 2 போட்டியிலும் வென்ற நிலையில் கடைசி 8 போட்டியில் 2ல் வெற்றி, 6ல் தோல்வி அடைந்துள்ளது.
* ராஜஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 4 போட்டியிலும் டெல்லி வென்றுள்ளது. டெல்லியில் கடைசியாக மோதிய 5 போட்டியிலும் அந்த அணி தான் வென்றுள்ளது.
* இந்த சீசனில் தொடர்ச்சியாக 5 தோல்விக்கு பின் டெல்லி நேற்று வென்றது.
ஐபிஎல்லில் கே.எல்.ராகுல் 8 சீசன்களில் 500 பிளஸ் ரன் அடித்துள்ளார். கோஹ்லி 9முறை 500 பிளஸ் ரன் எடுத்து டாப்பில் உள்ளார்.
