சென்னை: கிளாண்டர்ஸ் தொற்று எதிரொலியாக தமிழ்நாட்டில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, உதகை மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குதிரை சவாரி மேற்கொள்ள கால்நடைத்துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், மூக்கில் சளி வடிதல், புண்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் குதிரையை சவாரிக்கு பயன்படுத்த கூடாது. குதிரை உரிமையாளர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகளைத் தாக்கும் ஒரு வகையான தொற்று. பர்கோல்டெரியா மலேய் எனும் பாக்டீரியா நுண்ணியிரியால் பரவுகிறது. குதிரை மற்றும் கழுதைகளுக்கு இடையே மிக வேகமாக பரவக் கூடியது. அந்த பாதிப்புக்குள்ளான விலங்குகளின் உடல் முழுவதும் கழலைக் கட்டிகள் (கிளாண்ட்) உருவாகும் என்பதால் இதற்கு கிளாண்டர்ஸ் நோய் என்று பெயர்.
தொற்றுக்குள்ளான விலங்குகளிடம் நேரடித் தொடர்பில் இருப்பவர்களுக்கு கிளாண்டர்ஸ் நோய் பரவும் வாய்ப்புள்ளது. விலங்கின் புண்களில் இருந்து வெளியேறும் திரவம் மனிதர்களின் தோலில் நேரடியாக படுவதால் தொற்று பரவும். அவை இருமும் போதும், கணைக்கும் போதும் அதில் இருந்து வெளியேறும் நீர்த் திவலைகளை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
