×

எனக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள்; என் குடும்பத்தை சீண்டாதீர்கள்; இருமுறை தற்கொலைக்கு முயன்றேன்: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி

 

* நடிப்புக்கு முழுக்கு; மனைவி மீது சரமாரி குற்றச்சாட்டு

சென்னை: எனக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள். இருமுறை தற்கொலைக்கு முயன்றேன் என மனைவி மீது சரமாரி குற்றச்சாட்டு கூறி நடிகர் ரவி மோகன், சென்னையில் கண்ணீர்மல்க பேட்டி அளித்தார். நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், பாடகி கெனிஷாவுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ரவி மோகன் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கேரளாவில் நடந்த கலாச்சார விழா ஒன்றில் அவர்கள் கலந்துகொண்டனர். ஏற்கனவே ரவி மோகனின் குடும்ப பிரச்னைக்கும், விவாகரத்து வழக்கிற்கும் கெனிஷாதான் காரணம் என்று சமூக வலைத்தளங்கள் உள்பட பல்வேறு தளங்களில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவர்கள் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வருவது, இக்கருத்தை உறுதி செய்வது போல் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், பாடகி கெனிஷா மீது, ரவி மோகன் மனைவி ஆர்த்தி அவதூறு வழக்கு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘கெனிஷா சமூக வலைத்தளங்கள் உள்பட எந்த ஊடகத்திலும் ஆர்த்தி குறித்து பேசக்கூடாது’ என்று தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் கெனிஷா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘19 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. எனது கணவர் என்னை கொடுமைப்படுத்தினார். அவர் என்னை தாக்கியதில், எனது வயிற்றில் இருந்த 4 மாத குழந்தை கருவிலேயே கலைந்து விட்டது.

அப்போது எனது அடிவயிற்றில் ரத்தம் வழிந்தது. நான் எனது வாழ்க்கையில் அப்பா, அம்மா, குழந்தை உள்பட அனைவரையும் இழந்துவிட்டேன். இதிலிருந்து மீண்டு வருவதற்கு பல போராட்டங்களை சந்தித்தேன். அப்படி இருக்கும்போது, நான் எப்படி இன்னொரு குடும்பத்தை கெடுக்க நினைப்பேன்? ரவி மோகன் ஒன்றும் குழந்தை இல்லை. அவரது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுப்பவர் அவர்தான். அப்படி இருக்கும்போது, இந்த விவகாரத்தில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்?’ என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், சென்னையை விட்டே சென்று விடுவதாகவும், இனிமேல் எந்த சோஷியல் மீடியாவிலும் இடம்பெற மாட்ேடன் என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், சென்னையிலுள்ள அலுவலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்த ரவி மோகன், கண்ணீருடன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு: சாதுவாக இருந்த என்னை நிறையபேர் சீண்டி பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். இத்தனை நாள் நான் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம் என்று நினைக்கிறேன். விவாகரத்து கிடைக்கும்வரை நான் நடிக்க மாட்டேன். சாது மிரண்டால் காடுகொள்ளாது. 23 வருடங்கள் இரவு, பகலாக கடுமையாக உழைத்துள்ளேன். எனது 90 சதவீத படங்கள் வெற்றிபெற்றுள்ளன. எனது அப்பாவும், அண்ணனும் 4 வருடங்களாக வேலை செய்யவில்லை. இளம் வயதில் குடும்பத்துக்காக உழைத்தேன்.

எனது குடும்பத்துக்காக நான் இருக்கிறேன். எனது 2 மகன்களையும் பார்க்க விடவில்லை. எனது கடந்த கால வாழ்க்கையில் 14 வருடங்கள் வாழ்ந்துள்ளேன். எனது படங்களில் பெண்களின் உரிமைகளை பற்றி பேசியிருக்கிறேன். அப்படிப்பட்ட நான், பெண்களை பற்றி தவறாக பேசுவேனா? எனது தாய் அப்படி என்னை வளர்க்கவில்லை. எனது மகன்களை நான் எப்படி விட்டுவிடுவேன்? அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். ஆனால், இன்று எனது மகன்களை பார்க்க விடுவதில்லை. பள்ளிக்கு கூட பாதுகாவலர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள். அவருடனான (ஆர்த்தி) வாழ்க்கை வேண்டாம் என்றுதான் தெறித்து ஓடி வந்தேன். நான் எப்படி ஷூட்டிங்கிற்கு வருகிறேன் என பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். அவரை தயாரிப்பாளராக்கியதே நான்தான். வீட்டை விட்டு எதுவும் இல்லாமல் வந்தவன் நான்.

இன்று நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். அவர்கள் கோடிக்கணக்கில் வைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். ஒரு பெண் என்னை புரிந்துகொண்டு வந்தார். இப்போது அவரையும் (கெனிஷா) காலி செய்து அனுப்பி விட்டார்கள். நான் பார்க்காத நடிகைகளா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். 45 வயதில் அழகான பெண்கள் பின்னால் எப்படி செல்ல முடியும்? இதுவரை எனது மகன்களுக்காகவே வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தேன். எனது அப்பாவும், அம்மாவும் அந்த பெண் (ஆர்த்தி) வேண்டாம் என்று காலில் விழுந்து கெஞ்சினார்கள். ஒரு சின்ன அன்பு இருந்திருந்தால் நான் வந்திருப்பேனா? வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டேன்.

எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். எனது தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்க மாட்டேன். எனக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் நான் ரத்த வாந்தி எடுத்து கொண்டிருக்கிறேன். அதோடு, 2 முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்திருக்கிறேன் (கையை அறுத்து கொண்டதை காட்டுகிறார்). ஒரு 3 எழுத்து நடிகைக்கு என்னை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? அவர் என்னை பெற்றாரா? இனிமேல் அவர் என்னை பற்றி தவறாக பேசினால், அதை கேட்டுக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். யாரும் மற்றவர்கள் வாழ்க்கையில் நுழையாதீர்கள்.

தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனது குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசினாலோ, சீண்டினாலோ சும்மா இருக்க மாட்டேன். இவ்வாறு ரவி மோகன் கண்ணீருடன் பேசினார்.

தூங்கி கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பாதீர்கள்; ஆர்த்தி ரவி
இதையடுத்து இன்று ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ‘தூங்கி கொண்டிருக்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பாதீர்கள். அது ஒரு தாய் சிங்கமாக இருந்தால் கடவுள் காப்பாற்றட்டும். நான் கண்ணியமாக, அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைக்க கூடாது. அதை பயன்படுத்தி கொள்ளவும் கூடாது. எனது குழந்தைகளையும், எனது கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், எனது கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து உண்மையுடன் உலகை எதிர்கொள்வேன். ஏனெனில், இறுதியில் உண்மைதான் வெல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Billy ,Ravi Mohan ,Saramari ,Chennai ,
× RELATED ஒன்றிய அரசு டெண்டர் வெளியிட்டது; தமிழக...