சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டி லக்னோ அணி அபார வெற்றி

லக்னோ: சென்னைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரின் 59வது போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து சென்னை அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த இணை துவக்கம் முதல் தடுமாற்றத்துடன் ஆடினர்.

ஆகாஷ் சிங் வீசிய 4வது ஓவரில் கேப்டன் ருதுராஜ், 13 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி அசத்திய ஆகாஷ் சிங், 6வது ஓவரில் சஞ்சு சாம்சனை (20 ரன்) வீழ்த்தினார். அடுத்து வந்த உர்வில் படேலும் (6 ரன்), ஆகாஷ் சிங் வீசிய 8வது ஓவரில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின், கார்த்திக் சர்மா, டெவால்ட் புரூவிஸ் இணை சேர்ந்து சிறப்பாக ஆடினர். புரூவிஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில், முகம்மது ஷமியிடம் வீழ்ந்தார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்ட கார்த்திக் சர்மா 42 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில், ஷாபாஸ் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின், சிவம் தூபே, பிரசாந்த் வீர் இணை சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை விளாசினர். 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது.

அந்த அணியின் சிவம் தூபே 18 பந்துகளில் 32 ரன், பிரசாந்த் வீர் 10 பந்தில் 13 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். லக்னோ தரப்பில் ஆகாஷ் சிங் 3, முகம்மது ஷமி, ஷாபாஸ் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  இதையடுத்து, களம் இறங்கிய லக்னோ அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதனால், 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றிபெற்றது.

Related Stories: