×

அமைச்சரவை விரிவாக்கம் செய்யவில்லை.. இலாகாவும் ஒதுக்கவில்லை புதிய அரசு பொறுப்பேற்று ஒரு வாரமாகியும் நகராத கோப்புகள்? விவசாய துறையில் பெரிய அளவில் பாதிப்பு

சென்னை: புதிய அரசு பொறுப்பேற்று ஒரு வாரமாகியும் இன்னும் துறை வாரியாக அமைச்சர்கள் நியமிக்காததால், எந்த கோப்புகளும் நகராமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் அரசு நிர்வாகம் முடங்கியதோடு விவசாய துறையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக அரசு மே 10ம் தேதி பதவியேற்றது. 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். வழக்கமாக பதவியேற்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிக்கப்படும் நிலையில், இம்முறை பல நாட்கள் கடந்தும் எந்த அமைச்சருக்கும் அதிகாரப்பூர்வமாக துறைகள் ஒதுக்கப்படவில்லை.

இதுவே தற்போது தமிழகம் முழுவதும் நிர்வாக தேக்கத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதலமைச்சரை சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் வரை பதவியேற்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைக்கு 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுள்ளனர். மீதமுள்ள அமைச்சரவை பட்டியல் இன்னும் தயாராகவில்லை. கேரளா சென்றுள்ள தமிழக ஆளுநர் திரும்பிய பிறகு முழுமையான அமைச்சரவை பட்டியலை வழங்க தவெக தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியானாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அமைச்சரவை விரிவாக்கம் தாமதமடைவதற்கு முக்கிய காரணமாக கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை கோரிக்கைகள் என கூறப்படுகின்றன. முதலில் 2 அமைச்சர் பதவிகள் மட்டுமே கேட்டு வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது 5 அமைச்சர் பதவிகளை கோரி விஜய்யை தொந்தரவு செய்து வருகின்றது. 1964ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் தமிழக ஆட்சியில் காங்கிரஸ் மீண்டும் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அந்த கட்சி வாதிடுகிறது.

அதனால் வெறும் அமைச்சரவை இடம் மட்டும் அல்லாமல், முக்கிய வருவாய் தரும் மற்றும் செல்வாக்கு மிக்க துறைகளையும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வற்புறுத்துகிறதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுகவின் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியும் தங்களிடம் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி, ஏழு அமைச்சர் பதவிகளை கோரி வருகின்றனர். அதிலும் முக்கிய இலாகாக்களை வழங்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தவெக சொந்த எம்எல்ஏக்களிடமும் அமைச்சரவை ஆசை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்கள், முக்கிய மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள், நிதி மற்றும் பிரசார பொறுப்புகளை கவனித்தவர்கள் ஆகியோருக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் யாருக்கு அமைச்சரவை பதவி வழங்குவது, யாருக்கு எந்த துறை ஒதுக்குவது என்ற விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கடும் அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாததால் தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான கோப்புகள் தேங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.

அரசு டெண்டர்கள், நிதி அனுமதிகள், புதிய திட்ட ஒப்புதல்கள், மாவட்ட நிர்வாக அனுமதிகள், ஒப்பந்த நீட்டிப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் அமைச்சர்களின் ஒப்புதல் இல்லாமல் நகர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சில அவசர கோப்புகளில் மட்டும் அதிகாரிகள் தங்களது நிர்வாக அதிகார வரம்பிற்குள் கையெழுத்திட்டு பணிகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் முக்கிய நிதி மற்றும் கொள்கை முடிவுகள் அனைத்தும் அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

கடந்த மார்ச் 15ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து அரசின் வழக்கமான செயல்பாடுகள் மந்தமாகத் தொடங்கின. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பல திட்டங்கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் தேர்தல், வாக்கு எண்ணிக்கை, ஆட்சி அமைப்பு ஆகிய கட்டங்களை கடந்து தற்போது இரண்டு மாதங்கள் கடந்தும் அரசு நிர்வாகம் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால் பல்வேறு துறைகளில் நடந்து வந்த திட்டங்கள் பாதியில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள், கால்வாய் பராமரிப்பு, மாநகராட்சி மேம்பாட்டு திட்டங்கள், கிராமப்புற சாலை அமைப்புகள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை தாமதத்தின் மிகப்பெரிய தாக்கம் தற்போது விவசாயத் துறையில் காணப்படுகிறது. கோடை கால சாகுபடிக்கான நெல் மற்றும் பிற தானிய கொள்முதல் பணிகள் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசு கொள்முதல் மையங்களில் தானியங்கள் தேங்கி கிடப்பதாகவும், சரக்குகளை ஏற்றிச் செல்ல வந்த லாரிகள் நாட்களாக காத்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதே நேரத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறப்பது, காவிரி நீர் விவகாரம், நீர்வள மேலாண்மை, பயிர் காப்பீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் தாமதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, வருவாய், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் அதிகாரிகள் அமைச்சரின் அனுமதி இல்லாமல் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கின்றனர். பல அரசு கட்டுமான பணிகளுக்கான காசோலைகள் கையெழுத்தின்றி கிடப்பில் இருப்பதால் ஒப்பந்ததாரர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். சில இடங்களில் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பணியிட மாறுதல்கள் நடைபெறும்.

ஆனால் இம்முறை அமைச்சர்கள் இல்லாததால் அந்த நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளன. அதே நேரம் தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள் முதல் முதன்மை அதிகாரிகள் வரை பணி இடமாற்றம் செய்யப்பட போவதாக தகவல் வந்துள்ளது. இதனால் அரசு அதிகாரிகள் பணி மாறுதல் வரும் என்று அவர்களின் பணிகளை சரியாக கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். சில அதிகாரிகள் தங்களது குழந்தைகளின் பள்ளிச்சேர்க்கை, குடும்ப இடமாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் முடிவு எடுக்க முடியாமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட அளவிலான அலுவலகங்களில் கோப்புகள் நகராதது, டெண்டர்கள் நிறுத்தப்பட்டிருப்பது, ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படாதது, விவசாய கொள்முதல் தாமதம், திட்ட அனுமதிகள் நிறுத்தம் போன்றவை மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கத் தொடங்கியுள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீடு விரைவில் அறிவிக்கப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் நிலவி வரும் நிர்வாக மந்தநிலை மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.

Tags : Chennai ,Vijay ,Thaveka… ,
× RELATED சென்னை புதுவண்ணாரப்பேட்டையில்...