×

கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் செலவு; ராகுலின் 54 வெளிநாட்டு பயணங்களின் பின்னணி என்ன?: பாஜக – காங்கிரஸ் தலைவர்கள் மோதல்

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்கான நிதி ஆதாரம் குறித்து பாஜக பல்வேறு அடுக்கடுக்கான புகார்களைக் கிளப்பியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரையிலான தனது 22 ஆண்டுகால பொது வாழ்க்கையில், காங்கிரஸ் மூத்த தலைவரான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54 முறை ரகசியமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரான எம்பி சம்பித் பத்ரா கூறுகையில், ‘ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் மற்றும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்தவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும். ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் முன்பாக விதிகளின்படி ஒன்றிய அரசிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் உரிய அனுமதி பெறவில்லை. இது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தீவிரமான விதிமீறலாகும். ராகுல் காந்தியின் வருமானத்திற்கும் வெளிநாட்டுப் பயணச் செலவுகளுக்கும் இடையே பெரும் முரண்பாடு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ராகுல் காந்தியின் மொத்த வருமானம் 11 கோடி ரூபாயாக இருந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களுக்காக மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 2014-15ம் ஆண்டில் அவரது வருமானம் 86 லட்சம் ரூபாயாக இருந்தபோது, ஒரே ஒரு வெளிநாட்டுப் பயணத்திற்கு 4.5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 2017-18ம் ஆண்டில் 1.2 கோடி ரூபாய் வருமானத்திற்கு 6 கோடி ரூபாயும், 2019-20ம் ஆண்டில் 1.29 கோடி ரூபாய் வருமானத்திற்கு 4.6 கோடி ரூபாயும், 2021-22ம் ஆண்டில் 1.03 கோடி ரூபாய் வருமானத்திற்கு 2.6 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது’ என்றார். பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இது தோல்விகளை மறைக்கச் செய்யும் திசைதிருப்பும் பாஜகவின் வியூகம் என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்டுள்ள தொடர் பின்னடைவுகள் மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே சம்பித் பத்ராவும் பாஜகவும் இத்தகைய புகார்களைக் கூறுகின்றனர். சீனாவிடம் ஒன்றிய அரசு ஒவ்வொரு நாளும் சரணடைந்து வரும் நிலையில், உலகளவில் செல்வாக்கு மிக்கவர் என்ற பிரதமரின் பிம்பம் தற்போது முற்றிலுமாக உடைந்துவிட்டது. இதிலிருந்து தப்பிக்கவே ராகுல் காந்தியின் பழைய பயணங்கள் குறித்துத் தேவையற்ற சர்ச்சையை உருவாக்குகின்றனர்’ என்று தெரிவித்தார்.

Tags : Rahul ,BJP ,Congress ,NEW DELHI ,Rahul Gandhi ,
× RELATED பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் இது தான்.!! மத்திய அமைச்சர் விளக்கம்