ஊத்துக்கோட்டை: வடமதுரை கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணியால் தற்போது, குடிமகன்களில் கூடாரமாக அந்த இடம் மாறியுள்ளது. அதனால், அதன் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 700க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள், இங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்ட வேண்டும்.
ஆனால், இந்த ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த கட்டிடம் கடந்த 8 வருடங்களாக சேதம் அடைந்து மழை காலங்களில் மழை நீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்தது. மேலும், கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் 2025 – 2026 மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பணிகளும் கடந்த வருடம் தொடங்கியது. ஆனால் ஊராட்சி மன்றம் கட்டும் பணிகள் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் பாதியில் பணிகள் நிறுத்தப்பட்ட ஊராட்சி கட்டிடத்தில் குடிமகன் சிலர் குடித்து விட்டு மது பாட்டில் மற்றும் வாட்டர் பாட்டில்களை அங்கேய போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இதனால், புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் பாராக மாறியுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகைில், ‘வடமதுரை கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் ஆகியவை நடைபெறும்.
ஊராட்சி மன்ற கூட்டம் பழைய கட்டிடத்தில்தான் செயல்படுகிறது. இந்த ஊராட்சி அலுவலகத்தில் வடமதுரை, பேட்டைமேடு, எர்ணாங்குப்பம், செங்காத்தாகுளம், ராமாபுரம் கண்டிகை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ஊராட்சி அலுவலகத்திற்கு வருவார்கள். இது சம்மந்தமாக நாங்கள் பெரியபாளையம் பிடிஒ அலுவலகம் மற்றும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். எனவே, புதிய ஊராட்சி கட்டிடத்தை விரைவில் கட்டி முடித்து திறக்க வேண்டும்’ என்றனர்.
