மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஆபத்தை உணராமல் குழந்தைகள் கடலில் இறங்கி குளிப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாய சூழல் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் செதுக்கிய புராதன சிற்பங்கள், அழகிய கடற்கரை மற்றும் தலசயன பெருமாள் கோயில் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்ப்பதற்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு, பின்னர் கடலில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆபத்தான நிலையில் இறங்கி குளிக்கின்றனர்.
இதில், ஒருசிலர் ராட்சத அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக பலியாகின்றனர். கடந்த, 5 ஆண்டுகளில் இதேபோல் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாமல்லபுரம், கடலில் ஆபத்தான நிலையில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி உள்ளதா என்பதும் தெரியவில்லை. இங்கு, பல்வேறு பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப கடல் சீற்றம் மிகுந்து காணப்படும் மேலும், கடலுக்கு அடியில் உள்ள மணல் பகுதியில் புதையும் தன்மை உள்ளது. இதில், எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி, உற்சாகமாக கடலுக்குள் இறங்கி ஆபத்தான நிலையில் குளிக்கும் குழந்தைகள், பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகளில் பலர் நீரோட்டம் மற்றும் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு, நீருக்குள் மூழ்கி பரிதாபமாக பலியாகி வருவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இத்தகைய, சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் கடலோர காவல்படை போலீசாரும் இருப்பதில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர். புராதன சின்னங்களை சுற்றி பார்த்து கடற்கரைக்கு சென்று ஆபத்தை உணராமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் கடலில் இறங்கி குளித்து குத்தாட்டம் போடுகின்றனர். கடலில் குளித்து ராட்சத அலையில் இழுத்து செல்பவர்களை மீட்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் மீனவர் குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜை மாவட்ட கலெக்டர் உயிர் காப்பாளராக நியமித்தார். ஆனால், அவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றி வருகிறார். இவர், உயிர் காப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஆண்டுக்கு சராசரி 15 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்.
ஆனால், உயிர் காப்பாளராக கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாக உயிரிழப்புகள் வெகுவாக குறைந்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளிப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாமல்லபுரம் கடலுக்குள் இறங்கி குளிப்பவர்களின் உயிரிழப்பை தடுக்க, கடற்கரையில் நிரந்தர தடுப்பு வேலி, எச்சரிக்கை பலகை, கடலோர காவல் படையினர் ரோந்து உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அங்கு கடலுக்குள் இறங்கி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுபவர்களை மீட்பதற்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு உபகரணங்களுடன் போதிய அளவு உயிர் காப்பாளர்களை தயார் நிலையில் வைத்திருக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
உயிர் காப்பாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டும்
கடற்கரையில் பணியாற்றும் உயிர் காப்பாளருக்கு படகு, இன்ஜின், நங்கூரம், கயிறு, லைப் ஜாக்கெட், கட்டுமரம், துடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி நிர்வாகம் மூலமோ அல்லது மாவட்ட நிர்வாகம் மூலமோ வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுதுகின்றனர்.
குழந்தைகள் குளிப்பதை தடுக்க வேண்டும்
மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு, கடற்கரைக்கு சென்று ஆபத்தான நிலையில் குளிப்பதோடு, தங்களது குழந்தைகளை கடலில் கண் மூடித்தனமாக தூக்கி போட்டு விளையாடுகின்றனர். சில, பெற்றோர்கள் குழந்தைகளை கடற்கரையில் வெறுமனே விட்டு, விட்டு கடலில் குளிக்கின்றனர். இதனால், திடீரென ராட்சத அலையில் சிக்கி குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகள் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
கடலோர போலீசார் கண்காணிக்க வேண்டும்
மாமல்லபுரம் கடற்கரையில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் பணியில் இருப்பதில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கின்றனர். எனவே, தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடலோர பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என கடற்கரை வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
