பெரும்புதூர், மே 15: சோமங்கலம் அருகே பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் கல்லூரி வேன், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆதிகேசவன்(63). பெரும்புதூர் அடுத்த பென்னனூரில் உள்ள தனியார் கல்லூரியில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று கல்லூரியில் வேலை செய்யும் பணியாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு, பெரும்புதூர் – குன்றத்தூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அமரம்பேடு பகுதியில் சென்றபோது, திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பி மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை சுதாரித்துகொண்ட ஆதிகேசவன், வேனை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார்.
வேனில் இருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேறினர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வேன் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து சோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
