திருச்சி: சனாதனம் பற்றி சட்டசபையில் உதயநிதி பேசியதில் தவறில்லை என காங்கிரஸ் எம்பி கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியலில் குழப்பமான சூழலில் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது நடக்க தான் செய்யும். தவெக அரசு, காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் வழங்கும். ஒன்று அல்லது இரண்டு இடம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
சனாதனம் என்பது ஜாதி ஏற்றத்தாழ்வுகள் தான். அது ஒழிய வேண்டும் என்றே உதயநிதி பேசியுள்ளார். இதில் என்ன தவறிருக்கிறது. அதிமுக பிளவு எதிர்பார்த்தது தான். இந்தியா கூட்டணி என்பது பாஜ எதிர்ப்பை மையப்படுத்தியதுதான். அந்த வகையில் பாஜவை எதிர்க்கும் திமுக, இந்தியா கூட்டணியில் தான் உள்ளது. தேர்தல் முடிந்த இந்த நேரத்தில் சில நெருடல்கள் இருக்கிறது.
வரும் காலத்தில் அது சரியாகும். உலகத்தின் விஸ்வகுரு என தன்னை அழைத்து கொள்ளும் பிரதமர் மோடியால் நீட் தேர்வை கூட நேர்மையாக நடத்த முடியவில்லை. இதற்கு பின் வேறு அரசியல் இருக்கும். தவெக அரசு, கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும். அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
