பண்ருட்டி: அதிமுக எம்எல்ஏவாக பதவியேற்கும்போது ஜெ. படத்தை பார்த்து அழுத பண்ருட்டி எம்எல்ஏ, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால், அவரை பதவி விலகக்கோரி கட்சியினர் போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மோகன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நேற்றுமுன்தினம் சட்டமன்றத்தில் நடைபெற்ற விஜயின் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறடா உத்தரவை மீறி எம்எல்ஏ மோகன், விஜய் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இந்நிலையில் நேற்று பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அண்ணா கிராமம் ஒன்றியம் பூண்டி ஊராட்சி கட்டமுத்துபாளையம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் குமார் தலைமையில் அதிமுகவை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் திரளாக கூடி மோகன் எம்எல்ஏ, விஜய்க்கு ஆதரவாக வாக்களித்ததை கண்டித்து, அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து விலக கோரி கோஷமிட்டனர்.
பின்னர் அங்கு தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர். சுவர் விளம்பரங்களை அழித்தனர். சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ மோகன் பதவியேற்கும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை வணங்கி எம்எல்ஏவாக பதவியேற்றார். உறுதிமொழியை படித்து முடித்தவுடன் உணர்ச்சி வசப்பட்டு ஜெயலலிதா படத்தை மீண்டும் வணங்கி, அம்மா, முதல்ல வந்திருக்கேன், எங்களை காப்பாத்துங்க, எங்களுக்கு ஆசி வழங்குங்க என அழுதபடி பேசினார்.
