மதுரை: திமுகவை விட்டுப் பிரிந்த விவகாரத்தில் காங்கிரஸ் செய்தது தவறு. தமிழ்நாட்டில் திமுகவை அழிக்க முடியாது என எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மதுரையில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் முதுகில் குத்தியதாக சொல்வது தேவையற்ற விமர்சனம். தன்னிச்சையாக காங்கிரஸ் இந்த முடிவை எடுக்கவில்லை. தேர்தலை முழு மனதோடு தான் திமுகவுடன் சந்தித்தோம்.
தேர்தல் முடிவுகள் சாதகமாக வராததால் தான், நாங்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தோம். கூட்டணி ஆதரவோடு விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு. திமுக ஆரோக்கியமான அரசியல் கட்சியாகத்தான் வருங்காலத்திலும் இருக்கும். திமுக தலைவர் மீது எனக்கு அதீத மதிப்பு உண்டு. திமுகவின் முதுகில் குத்தியதாக சொல்வது பொருத்தமானது அல்ல. திமுக ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்து இதை நாங்கள் செய்திருந்தால் சொல்லலாம். திமுகவிடமிருந்து பரஸ்பரமாக பிரிந்திருக்கலாம்.
ஆனால், திமுகவுக்கு எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் மறுக்கவில்லை. திமுகவை விட்டு பிரிந்த விவகாரத்தில் காங்கிரஸ் செய்தது தவறு தான். தமிழ்நாட்டில் திமுகவை அழிக்க முடியாது. அவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது. விசிக, கம்யூனிஸ்ட் போல காங்கிரசும் செய்திருக்கலாம். திமுக பிரதான கட்சியாக இருக்கும். திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை. அதிமுக, பாஜவுக்கு தான் இந்த தேர்தலில் கடுமையான பாதிப்பு. அதிமுக இப்போது 3வது கட்சியாக மாறிவிட்டது. அதிமுக இனி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களிடம் இல்லை.
மதுபான கடைகளை மூடுவது எல்லா அரசுகளும் செய்வது தான். அது புதிய முடிவு அல்ல. செங்கோட்டையனை தவிர யாருக்கும் அங்கு அனுபவமில்லை. கொஞ்ச நாட்களுக்கு பின்னரே தவெக அரசை பற்றிய விமர்சனத்தை சொல்ல முடியும். மதசார்பற்ற ஆட்சியை தமிழ்நாட்டில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் மதசார்பற்ற சக்திகளின் ஆதரவை பெற்றுள்ளார். மரியாதை நிமித்தமாக விஜய் அனைவரையும் சந்தித்தார். அவர் ஏன் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்பது பற்றி நான் ஏதும் சொல்ல முடியாது. இவ்வாறு கூறினார்.
