பயத்தை என்ன செய்வது?

என்றென்றும் அன்புடன் – 17

பயம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிறு போல நம்மை கட்டிப் போடும். நம் திறமைகளை வெளிப்படுத்த விடாமல் தடுக்கும். பல நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகளைக் கூட தீர்மானிக்கும்.

இந்த பயம் எதனால்?

பயம் என்பது நம்மில் வேரூன்றி இருக்கும் உணர்ச்சி, அதன் அடிப்படையை தேடிச் சென்றால் மரண பயத்தில் கொண்டு நிறுத்தும். அந்தப் பயமே பல்வேறு பரிமாணங்களில் நம்மைத் துரத்தியபடி இருக்கிறது.பயம் என்பது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் ஒரு உணர்வாக மாற்றி வைத்து கொண்டு. ஆபத்தான நேரத்தில் சண்டை போடவோ, ஓடிப் போகவோ அல்லது அப்படியே அசையாமல் இருக்கவோ என்று அந்த பயத்தில் இருந்து தப்பிப்பதையே நம் லட்சியமாக வைத்திருக்கிறோம்.

பெரும்பாலான எண்ணங்களின் மூலம் இந்த பயமே. நம் மனதாலேயே அந்த எண்ணங்கள் உருவாக்கப்படுகிறது. நம் பழைய நினைவுகள், எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகள், ஏதாவது ஒரு பொருளின் மீதோ அல்லது உறவின் மீதோ உள்ள பற்றுதல் ஆகியவை பயத்தை உருவாக்குகின்றன.

என்ன நடக்குமோ என்று தெரியாத பயம்.
எதையாவது இழந்துவிடுவோமோ என்ற பயம்.
தோற்று விடுவோமோ என்ற பயம்.
இறந்துவிடுவோமோ என்ற பயம்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம்.

துரியோதனன் எப்போதும் பயத்திலேயே வாழ்ந்தான். தன் ஆட்சி அதிகாரத்தை, தன் பதவியை இழந்து விடுவோமோ என்று பயந்தான். பாண்டவர்களுக்கு சேர வேண்டிய ராஜ்ஜியத்தைப் பற்றி அவன் கொண்டிருந்த பொறாமையும், தனது நிலையை இழந்து விடுவோமோ என்ற பயமும் அவனைத் தப்புத் தப்பான காரியங்களைச் செய்யத் தூண்டின. அவன் ஒருபோதும் யாருடனும் சமரசம் செய்யவே இல்லை. பாண்டவர்களின் பலத்தையும், அவர்களின் நல்ல குணங்களையும் பற்றிய அவனது நிரந்தர சந்தேகமும், பயமுமே அவனது சதிகளுக்கும், கடைசியில் நடந்த குருக்ஷேத்திரப் போருக்கும் காரணம். அவன் பயத்தில் இருந்து தப்பித்து கொள்ளவே விரும்பினான். அதை விட்டு தப்பிக்கும் பொழுது பல விதமான சிக்கலில் சிக்கிக் கொண்டான்.

பயத்திலிருந்து விடுதலை அல்லது வெளியேறுவது எப்படி? என்று நிறைய புத்தகங்கள் உள்ளன. அவற்றை படித்தால் அவை என்ன சொல்லும் தெரியுமா?
குளிர்ந்த நீரில் நீராடுங்கள். உடலில் உள்ள உஷ்ணம் குறையட்டும். உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை சந்தியுங்கள். இனிமையான இசையை கேளுங்கள். வண்டியிலோ அல்லது காரிலோ வெகுதூரம் தனியாகச் சென்று விட்டு வாருங்கள். ஏதேனும், காமெடி ஷோக்களை பாருங்கள். பிடித்த இடங்களுக்கு சென்று அமர்ந்து கொள்ளுங்கள். இதுபோன்ற அறிவுரைகள் கொடுத்து உங்களின் பய உணர்விலிருந்து உங்களை வெகு தூரம் போகச் சொல்வார்கள்.

ஆனால், பயம் அங்கேயே இருக்கும். பயம் பயமின்றி பாதுகாப்பாக செழித்து வளரும். அதனால், பயத்தை நேருக்கு நேராக பார்ப்பதே சரியான வழி.பயத்திலிருந்து விலகி ஓடுவது அதை அதிகரிக்கும், பயத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.\”மனம் பயத்தை, அதைப் பெயரிடாமல், அதை ஆராயாமல், அதிலிருந்து ஓடாமல் வெறுமனே கவனிக்க முடியுமா?\”பயத்தை சும்மா கவனிப்பதன் மூலம் பல அற்புதங்கள் நிகழும் . அதை நியாயப்படுத்தவோ, அதிலிருந்து தப்பிக்கவோ முயற்சிக்கக் கூடாது.

குருக்ஷேத்திரப் போர்க் களத்தில் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட பயம் மிகவும் முக்கியமானது. தன் உறவினர்களையும், ஆசிரியர்களையும் கொல்ல வேண்டுமா என்று அவன் தயங்கினான். போரிட்டால் ஏற்படும் பாவங்களைப் பற்றியும், பெரியவர்களின் சாபத்தைப் பற்றியும் பயந்தான். தன் கடமையைச் செய்வதா, அல்லது உறவுகளைக் காப்பாற்றுவதா என்ற பெரிய குழப்பத்தில் ஆழ்ந்தான்.

அந்த பயத்தோடும், குழப்பத்தோடும் இருந்தான்.\”என்னால் ஆவது ஒன்றும் இல்லை\” என்று, தன் பலம் என்று நினைத்த வில்லை கீழே வைத்து சரணாகதி செய்தான். அந்த பயத்தின் முன், அதுவே அவனை வழி நடத்தியது.கிருஷ்ணர் பகவத் கீதை மூலம் அர்ஜுனனுக்குப் பயத்தைப் போக்கினார். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அவனது கடமையை (தர்மம்), ஆத்மாவின் உண்மையான தன்மையை, உடல் நிலையற்றது என்பதைப் பற்றி விளக்கினார். பயத்தைப் போக்கி, ஞானத்தின் மூலம் அமைதியைப் பெற வழிகாட்டினார்.

சீதையை இராவணன் கடத்திச் சென்ற பிறகு, இராமர் மிகவும் வருத்தப்பட்டார். சீ தைக்கு என்னாகுமோ என்ற கவலையும், பயமும் அவரை வாட்டின. ஆனால், இந்த பயம் இராமரைச் சோர்ந்து போக விடவில்லை. மாறாக, சீதையைத் தேடவும், அவளை மீட்கவும் ஒரு பெரிய உறுதியைக் கொடுத்தது. இராமரின் செயல்கள் தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தால் உந்தப்படவில்லை. மாறாக, தனது தர்மத்தில் இருந்து தவறி விடுவோமோ என்ற கவலையால் வந்த பயம்.

பயம் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும் பொழுது, தீவிரமான செயலில் ஈடுபடுவது உதவும். பெரும் செயல் நம் சிந்தனையை அறுக்கும் .சிந்தனை அறுபட்டால் பல அற்புதங்கள் நிகழும்.
நாம் தேடும் உதவி நம் கண் முன் நிற்கும் . எண்ணங்களை வளர்க்காமல் செயல்பட்ட ராமருக்கு அனுமன் உதவ முன் வந்தார்.தனது தங்கை தேவகியின் எட்டாவது குழந்தையால் தனக்கு மரணம் என்று ஒரு குரல் கேட்டதும், கம்சன் பயத்தால் நடுங்கினான்.

இந்த பயம் அவனைப் பிடித்துக்கொண்டு, கொடூரமான செயல்களைச் செய்யத் தூண்டியது (தேவகி மற்றும் வசுதேவரை சிறையில் அடைத்தது. அவர்களின் குழந்தைகளைக் கொன்றது). கம்சனின் பயம் வன்முறைக்கு வழிவகுத்தது, அந்த பயத்தை விட்டு அவன் அகலவே இல்லை.நமக்கு போதுமானதாக இல்லை என்ற பயம், அல்லது நம்மிடம் இருப்பதை இழந்து விடுவோமோ என்ற பயம்.

பயத்தை எதிரியாக பார்த்து விருத்திகளை பெருக்கிக் கொண்டான். அவை பல விதமாக பயத்தை தாக்கும் என்று கடைசி வரை நம்பினான். தோற்றுப் போனான்.
பிரகலாதனின் கதை பயம் இல்லாததற்கு ஒரு சிறந்த உதாரணம். அவன் தன் தந்தை இரண்யகசிபுவால் பல கொடுமைகளை அனுபவித்தான். ஆனாலும், விஷ்ணுவின் மீது அவனது ஆழ்ந்த பக்தி ஒருபோதும் மாறவில்லை. பயம் அவனை ஆட்கொண்டாலும் அதையும் விஷ்ணுவின் ரூபமாக வணங்கத் தெரிந்து கொண்டான்.

பயத்தின் முன் மண்டியிட்டான். அவன் மனதில் அனைத்தும் விஷ்ணுவின் ரூபமாகவே மிளிர்ந்தது. பிரகலாதனின் தூய பக்தியும், நம்பிக்கையும் பெரிய ஆபத்துகளைக் கூட பயமில்லாமல் சந்திக்க வைத்தது.அறியப்படாததைப் பற்றி ஒருபோதும் பயப்படுவதில்லை; அறிந்த ஒன்று முடிவுக்கு வருகிறதே என்றுதான் பயப்படுகிறோம்.

மாறாக, ஹிரண்யகசிபு பயத்தில் கூத்தாடினான். தான் அழிந்து விடுவோம் என்கிற மரண பயமானது. அவனை துரத்தியபடியே இருந்ததால் பல விதமான வரங்களை கேட்டு பெற்றான். தான் அழிந்து விடுவோம் என்பதால் அழியாமல் இருப்பதற்காக தன் பெயரையே ஜெபிக்கவும் வணங்கவும் சொல்லியபடி இருந்தான்.பயத்தின் வேர் ஒப்பிடுவதிலும், ஏதாவது சேர்த்து வைப்பதிலும் உள்ளது.தன் மகன் வணங்கிய விஷ்ணுவுடன் தன்னை ஒப்பிட்டு கொண்டான். பிரஹலாதனின் ஆழ்ந்த நம்பிக்கையும், பயமின்மையும் அவனை பெரிதும் அச்சுறுத்தியது. பயத்தின் முன் பாசம், அன்பு எல்லாம் மறைந்து போனது.மிருகம்போல் ஆனான். பயத்தை எதிர்க்க கிளம்பினான், தோற்றுப் போனான்.

பயம் பெரும்பாலும் கடந்த காலத்தில் (வருத்தம்) அல்லது எதிர்காலத்தில் (கவலை) வாழ்கிறது. பயமில்லாமல் இருக்க, நாம் நிகழ்காலத்தில் முழுமையாக வாழ வேண்டும்.
ஒரு உயர்ந்த சக்தியிடம் நம்மை ஒப்படைப்பது நம் தனிப்பட்ட பயங்களைப் போக்கும்.நம்மைப் பற்றியும், இந்த உலகின் உண்மையான இயல்பைப் பற்றியும் புரிந்துகொள்வது பயம் வருவதற்கான காரணத்தையே இல்லாமல் ஆக்கும். பயமில்லாமல் இருப்பதற்கு பயத்தை போக்கவோ, மாற்றவோ, பயத்தில் இருந்து தப்பிக்கவோ முயற்சி செய்யாமல் இருப்பதே. பயம் ஒரு இருண்ட மேகம்போல இருக்கலாம். ஆனால், ஞானமும் புரிதலும் அதை மழையாக நம் வாழ்வில் பொழிய வைக்கும்.

(தொடரும்)

ரம்யா வாசுதேவன்

Related Stories: