×

டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்: ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

 

டெல்லி: டெல்லியில் ஓடும் தனியார் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், பிதம்புரா குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அந்த வகையில் கடந்த 11ம் தேதி இரவு, அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சரஸ்வதி விஹார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேருந்து நின்றுள்ளது. அப்போது பேருந்து வாசலில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் அந்த பெண் நேரம் கேட்டுள்ளார்.

அப்போது அந்த நபர் பெண்ணை வலுக்கட்டாயமாக பேருந்துக்குள் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பேருந்து நங்லோய் பகுதியை நோக்கிச் சென்றது. அங்கு வைத்து அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டதும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nirfaya ,Delhi ,Pitampura ,Mangolpuri ,
× RELATED திமுக அரசு 1.31 கோடி பெண்களுக்கு வழங்கிய...