×

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 50,000 ஆண்டுகள் பழமையான பழைய கற்கால ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வளர் பிரதாப் ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவி ஒன்றை கண்டெடுத்தார். இதைக்குறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:- கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டபோது பழைய கற்கால ஆயுதம் கண்டெடுக்கப்பட்டது.

கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த பழைய கற்கால கருவி சுமார் 7.8 செ.மீ நீளமும் , 5.7 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது,

பழைய கற்கால ஆயுதம்:
முதன் முதலில் ராபர்ட் புரூஸ்புட் என்ற இங்கிலாந்தின் நிலவியல் ஆய்வாளர் 1863ல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளைக் கண்டெடுத்தார். தமிழகத்தில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழைய கற்கால ஆயுதங்களை மூன்று காலங்களாக வரிசைப் படித்தியுள்ளனர் அவை :-

1. கீழைப் பழங்கற்காலம் 17 லட்சம் முதல் 3.85 லட்சம் வரை பழமையானது,

2. இடைப் பழங்கற்காலம் 3.85 லட்சம் முதல் 80,000 வரை பழமையானது

3 மேலைப் பழங்கற்காலம் 80,000 முதல் 40,000 வரை பழமையானது என கால வரிசைப்படுத்தியுள்ளனர்

17 லட்சம் முதல் 3.85 லட்சம் ஆண்டுகள் பழமையான கற்கருவிகள் தமிழகத்தில் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் மாவட்டம் அருகே உள்ள குடியம் குகைப்பகுதியில் சுமார் 30 இடங்களில் பழைய கற்கால கல்லாயுதங்களை தொல்லியல் அறிஞர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகில் இருக்கும் கொற்றலை ஆற்றின் சமவெளியிலும், செங்கல்பட்டு அருகே உள்ள பாலாறு, மதுரை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, வட ஆர்க்காடு போன்ற மாவட்டங்களிலும் இத்தகைய கருவிகள் கண்டறியப்பட்டன, இக்கருவிகள் மிகவும் கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கல்லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரிய வருகிறது. பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள், குவார்ட்சைட் எனப்படும் கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தினர். எனவே இக்காலத்திற்குப் பழைய கற்காலம் என்று பெயரிடப்பட்டது. கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த கல் ஆயுதம் மேலை பழங்கற்காலத்தை சேர்ந்த சுரண்டும் வகையைச் சேர்ந்த பழங்கால கல் ஆயுதமாகும்.

இதன் காலம் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கலாம், இதே போல சுரண்டும் வகை கல் ஆயுதம் விருத்தாச்சாலம் அருகே உள்ள பாலக்கொல்லை மற்றும் பண்ருட்டி அருகே உள்ள ஒடக்கன் குப்பம் பகுதிகளில் ஏற்கனவே ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. பழைய கற்காலத்தில் மக்கள் நாடோடியாக வாழ்ந்தனர். இதன் பொருட்டு அவர்கள் பண்ருட்டி பகுதியில் பழங்கால மக்கள் இடம் பெயர்ந்து இருக்கலாம் அல்லது வெள்ளப் பெருக்கின் காரணமாக கூட இப்பகுதியில் கல் ஆயுதம் வந்திருக்கலாம் அதுமட்டும் அல்லாமல் இரண்டு மாதங்களுக்கு முன்பு உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சிறிய அளவிலான கிழிப்பான் (பிளேடு) கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பாக தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறினார்.

Tags : Thenpennai River ,Panrutty ,Cuddalore ,Emmanuel ,Pratap ,Kandarakottai ,Panrutty… ,
× RELATED அமைச்சர், வாரியத் தலைவர் பதவிகளுக்காக...