×

மு.க.ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடிக்கு நன்றி தவெகவின் தரங்கெட்ட அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்: டிடிவி தினகரன் காட்டமான அறிக்கை

 

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்த தவெக, ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி, எங்கள் கட்சி எம்எல்ஏவை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன். தவெகவின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றி.

அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவினர் செய்த அசிங்க அரசியலை கண்டித்து குரல் கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தவெகவின் இந்த தரம்கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தை காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : MK Stalin ,Udhayanidhi ,Edappadi ,Thaveka ,TTV ,Dinakaran ,Chennai ,AMMK General Secretary ,TTV Dinakaran ,MLA ,
× RELATED கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி: எண்ணூரில் பரிதாபம்