×

புதிய அரசு பொறுப்பேற்று விடுத்த உத்தரவின்படி வாலாஜாபாத், மதுராந்தகம் பகுதியில் இயங்கிய டாஸ்மாக் கடைகள் மூடல்: மதுபிரியர்கள் தள்ளுமுள்ளு

வாலாஜாபாத்: புதிய அரசு பொறுப்பேற்று விடுத்த உத்தரவின்படி வாலாஜாபாத் மற்றும் மதுராந்தகம் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதன் அருகில் இருந்த மற்றொரு கடைக்கு மது வாங்க சென்ற மதுபிரியர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வாலாஜாபாத் – காஞ்சிபுரம் செல்லும் சாலையை ஒட்டி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த சாலையை ஒட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகில் ஒரு டாஸ்மாக் கடையும், அதன் எதிரே உள்ள ஆறுமுகம் நகர் பகுதியில் மற்றொரு டாஸ்மாக் கடையும் இயங்கி வந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டருக்குள் செயல்படும் 717 டாஸ்மாக் கடைகள் மூட புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, வாலாஜாபாத் – காஞ்சிபுரம் சாலை ஆறுமுகம் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நேற்று திடீரென மூடப்பட்டது. இதனால் அங்கு வந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அதே சாலையில் செயல்படும் மற்றொரு டாஸ்மாக் கடையில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் மது வாங்க இரு சக்கர வாகனங்களில் வந்த மது பிரியர்களால் வாலாஜாபாத் – காஞ்சிபுரம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் சில மது பிரியர்கள் டாஸ்மாக் கடை அருகிலேயே அமர்ந்து மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கியதால் அங்கு விபத்துக்குள்ளாகும் சூழலும் நிலவியது. இங்கு செயல்படும் டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் மதுராந்தகம் வடக்கு பைபாஸ் பகுதியில் எதிரெதிரே இரண்டு கடைகளும், மாம்பாக்கம் பகுதியில் இரண்டு கடைகளும் செயல்பட்டு வந்தது. வடக்கு பைபாஸ் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கம். சிறுசிறு விபத்துகளும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்ற அரசு பேருந்து நிலையம், கோயில், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட பகுதிகளில் 500 மீட்டர் அருகில் செயல்பட்டால் மூட உத்தரவிட்டது. அதன்படி, மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டதாக கூறி வடக்கு பைபாஸ் பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளும் ஒரே நேரத்தில் நேற்று அதிரடியாக மூடப்பட்டன. மேலும் அந்தக் கடைகளில் இருந்த மது பாட்டில்களை லாரிகளில் ஏற்றி வேறு கடைகளுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் 2 மதுபான கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மது பிரியர்கள் கவலை அடைந்தனர்.

Tags : TASMAC ,Wallajabad ,Madhurantakam ,Walajabad-Kanchipuram ,
× RELATED தவெக அரசு மீதான நம்பிக்கை...