மன்னார்குடி சிறைக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள்: கைதிகள் அறையை நோட்டமிட்டதால் பரபரப்பு

 

மன்னார்குடி: மன்னார்குடி கிளைச்சிறையில் அதிகாலையில் அத்துமீறி நுழைந்து விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறையை 2 மர்ம நபர்கள் நோட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிளைச்சிறை தாலுகா அலுவலக சாலையில் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட கைதிகளை அடைக்க 21 அறைகள் உள்ளது. தற்போது சில விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் கண்காணிப்பாளராக பெருமாள் (50) இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இரண்டாம் நிலை காவலர் ஆனந்தன் காவல் பணியில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் கைதிகள் அடைக்கப்படிருந்த அனைத்து அறைகளையும் ஆனந்தன் கண்காணித்தார்.

அப்போது, விசாரணை கைதிகள் 9வது அறையின் ஜன்னலுக்கு பின்னால் 2 மர்ம நபர்கள் நோட்டமிட்டபடியே நின்றதை கண்டதும் அவர்களை பிடிக்க முயன்றார். அதற்குள் அவர்கள் வெளிப்புற சுற்றுச்சுவர் வழியாக தப்பிவிட்டனர். இதுகுறித்து ஆனந்தன் கண்காணிப்பாளர் பெருமாளுக்கு தகவல் அளித்தார். அவர் சிறைக்கு வந்து கைதிகளின் அறைகளை ஆய்வு செய்தார். புகாரின்படி மன்னார்குடி நகர போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: