சென்னை: முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் நாளை விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக தலைவர் திருமாவளவனை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிளுக்கு நேரில் நன்றி தெரிவித்த விஜய் நாளை திருமாவளவனையும் சந்தித்து நன்றி தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரை முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 108 தொகுதிகளில் வென்ற பிறகும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. இதையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தன. விஜய்க்கு விசிக கடைசி நேரத்தில் ஆதரவு அளித்து பெரும்பான்மைக்கு உதவியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் தவெக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து, இன்று காலை கூடிய தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
