மணலி: போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் மாத்தூர் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு நோயாளிகளின் வரத்து குறைந்துள்ளது. மாதம் ரூ.10 லட்சம் செலவு செய்தும் மருத்துவமனை முழுமையாக பயன்படாத அவலம் உள்ளது. சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 19வது வார்டு, மாத்தூரில் சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை உள்ளது. 100 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோருக்கு சிகிச்சைகள், தடுப்பூசி மற்றும் பொது மருத்துவம் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ரத்தப் பரிசோதனை ஸ்கேனிங், இசிஜி போன்ற பல்வேறு வசதிகளும் மருத்துவமனையில் உள்ளது.
இந்நிலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 நோயாளிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனைக்கு தூரத்திலிருந்து நோயாளிகள் வருவதற்கு மாநகர போக்குவரத்து வசதிகள் இல்லாததால் நோயாளிகள் வருகை வெகுவாக குறைந்து நாள் ஒன்றுக்கு சுமார் 20 முதல் 30 பேர் மட்டுமே நோயாளிகள் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பான பல்வேறு வசதிகள் மருத்துவமனையில் இருந்தும் போக்குவரத்து வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு வர முடியாத கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் மணலி பாடசாலை தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு செல்கின்றனர். எனவே இந்த மருத்துவமனை வழியாக மாநகர பேருந்து அல்லது மினி பேருந்து செல்லும் வகையில் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று போக்குவரத்து துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘நலிவுற்ற மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக சுமார் 25 கோடி செலவில் அனைத்து மருத்துவ வசதியுடன் இந்த 2 அடுக்கு மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. நாளொன்றுக்கு சுமார் 500 நோயாளிகள் பயன்பெறும் வகையில் 4 மருத்துவர்கள், 8 செவிலியர்கள், ஒரு லேப் டெக்னீசியன், 9 ஊழியர்கள், மூன்று தூய்மை பணியாளர்கள் என சுமார் 26 பேருக்கான நியமிக்கப்பட்டு இவர்களுக்கான மாத ஊதியம் மின் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவு உள்பட ஒவ்வொரு மாதத்திற்கும் சுமார் ரூ.10 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. ஆனால் போக்குவரத்து வசதி இல்லாததால் நோயாளிகள் வருகை மிகவும் குறைவாக இருப்பதால் மருத்துவமனைக்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் முழுமையான சேவை செய்ய முடியாத நிலை உள்ளது’’ என்றார்.
வேறு மருத்துவமனைக்கு மாறிய எக்ஸ்ரே மிஷின்
மாத்தூர் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்காக எக்ஸ்ரே மிஷின் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மிஷினை ஆபரேட் செய்ய டெக்னீசியன் இல்லாததால் பயன்படுத்தப்படாமலே கிடப்பில் இருந்தது. இதனால் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றால் வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று தான் எடுக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால் நோயாளிகள் எக்ஸ்ரே டெக்னீசியன் ஏன் போடவில்லை என கேட்டு அதிகாரிகளை எச்சரித்தனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எக்ஸ்ரே மிஷினையே வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டனர். எனவே இந்த மருத்துவமனைக்கு மீண்டும் எக்ஸ்ரே மிஷின் கொண்டு வரப்பட்டு அதற்கு டெக்னீசியன் நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயன்படாத படுக்கைகள்
சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கர்ப்பிணிகள் எளிதாக சிகிச்சை, பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வசதியாக அறுவை சிகிச்சை கூடம், 100 படுக்கைகள், சுவாச சிலிண்டர் வசதி போன்றவை அமைக்கப்பட்டன. ஆனால் இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் 8வது மாதத்தில் வேறு ஒரு மருத்துவமனையில் சென்று மகப்பேறு பிரசவம் செய்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் இந்த மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் பயன்படாமலேயே உள்ளது. மேலும் இவ்வளவு வசதி உள்ள இந்த மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று பிரசவங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பராமரிக்கப்படாத பசுமை பூங்கா
மருத்துவமனை அமைந்துள்ள இடம் பசுமை பூங்காவைப் போல் இருக்க வேண்டும் என்பதற்காக சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆனால், இவ்வாறு உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்காததால் அனைத்து செடிகளும் காய்ந்து பாழாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளதோடு சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாமல் காட்சியளிக்கிறது.
