கோடை விடுமுறை எதிரொலி; புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் அவதி

 

மாமல்லபுரம்: தமிழ்நாட்டில் முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு ஒரு மாதத்திற்கு மேல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையை ஜாலியாக கழிக்க தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தங்களது குடும்பத்தோடு மாமல்லபுரத்தில் குவிந்தனர். இவர்கள் வருகையால் மாமல்லபுரத்தின் முக்கிய வீதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. தொடர்ந்து, கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், மாமல்லபுரத்துக்கு ஏராளமான சுற்றுலா வாகனங்கள் படையெடுத்ததால் கிழக்கு ராஜவீதி, கடற்கரை செல்லும் சாலை, ஐந்து ரதம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வெளியேற முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நீண்ட தூரம் வரிசை கட்டி நின்றது. இதனால், உள்ளூர் மக்கள், சாலையோர வியாபாரிகள் கடும் சிரமமடைந்தனர். நேற்று, காலையில் இருந்து மதியம் 1 மணி வரை குறைந்த பயணிகளே வந்தனர். மதியம் 1 மணிக்கு பிறகு ஏராளமான வாகனங்களில் பயணிகள் வரத் தொடங்கினர். இதனால், கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி நுழைவு வாயில் பகுதியிலும் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடைகளை வழிமறித்தும், சாலைகளை ஆக்கிரமித்தும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வியாபாரிகள், உள்ளூர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்த பயணிகள் ஏராளமானோர் கடற்கரைக்கு சென்று, சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குத்தாட்டம் போட்டதை காணமுடிந்தது. ஒரு சில, இடங்களில் வாகனங்கள் கண்மூடித்தனமாக நிறுத்தப்பட்டது. பின்னர், போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, வாகனங்களை அப்புறப்படுத்தி மாற்றுப்பாதையில் வெளியேற்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர்.

எனவே, சனி-ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூடுதல் டிராபிக் போலீசாரை நியமிக்க போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கூடுதல் பேருந்து: பொதுமக்கள் வலியுறுத்தல்
கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில், மாமல்லபுரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகின்றனர். அப்படி வரும் பயணிகள் புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்து அதன் முன்பு நின்று தங்களது செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.

தற்போது, கடந்த மாதம் 17ம் தேதி முதல் இம்மாதம் மே 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் மாமல்லபுரத்தில் குவிய தொடங்கியுள்ளனர். இனி வரும் நாட்களில் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாதவரம், பிராட்வே, மெரினா பீச், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மாமல்லபுரத்துக்கு கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஏசி பேருந்து மீண்டும் இயக்கப்படுமா?
சென்னை அடையாறில் இருந்து தடம் எண் 588, தாம்பரத்தில் இருந்து தடம் எண் 515 ஆகிய இரண்டு மாநகர ஏசி பேருந்துகள் மாமல்லபுரத்துக்கு இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், கோடை விடுமுறையை கழிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, ஓராண்டுக்கு முன்பு நிறுந்தப்பட்ட ஏசி பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: