சென்னை: நாங்கள் திமுகவிடம் சொல்லாமல் வரவில்லை. எங்கள் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணி தலைவர் கனிமொழியிடம் பேசிய பிறகே முடிவு செய்தனர் என செல்வப்பெருந்தகை கூறினார். விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு வந்த ராகுல், விழா முடிந்து, சென்னை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டார். அவரை வழியனுப்புவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடன் வந்தனர். ராகுல் காந்தியை வழி அனுப்பி விட்டு வெளியே வந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூட்டாக அளித்த பேட்டி: புதிய முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து எங்கள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் ராகுல் காந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது எங்கள் கட்சி தொண்டர்களுக்கும் தலைமைக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது தேர்தலின் போது இந்த அரசு மக்களிடம் அளித்த வாக்குறுதிகளையும் காங்கிரஸ் கட்சி அளித்த உறுதிமொழிகளையும் நிறைவேற்றிய வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது. அந்த நோக்கத்திலேயே கூட்டணி கட்சிகள் அனைத்தும் செயல்படும்.
மேலும் புதிய அரசியல் காங்கிரஸ் இடம்பெறும் இது உறுதி. ஆனால் முதல் கட்ட அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். பதவி ஏற்பில் காங்கிரஸ் சார்பில் எங்கள் அமைச்சர் பட்டியல் இன்னும் வழங்கப்படாததால் அவர்கள் பதவி ஏற்க முடியவில்லை அடுத்த கட்டத்தில் காங்கிரஸ் பிரதிநிதிகள் அமைச்சரவையில் இணைவார்கள். மாநிலத்தின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் விஜய் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். அதன் மூலம் தமிழகத்தின் உண்மையான நிதி நிலை மக்களுக்கு விளக்கப்படும். அதற்கு பின்னர் புதிய அரசு தனது நிர்வாக பயணத்தை முழுமையாக தொடங்கும். இவ்வாறு கூறினார். தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: இரண்டாம் கட்ட அமைச்சரவை பட்டியலில் காங்கிரஸ் இடம்பெறும். அதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம், இன்று பொறுப்பெடுத்துள்ள முதலமைச்சருக்கு காங்கிரஸ் பேக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். காங்கிரஸ் கட்சியும்- தமிழக வெற்றிக் கழகத்துடன் உடனான கூட்டணி நாடாளுமன்றம், உள்ளாட்சி என அனைத்து தேர்தலிலும் தொடரும். எந்தெந்த துறையை காங்கிரஸ் பெறும் என்பதை ஆலோசனை செய்து தான் தெரிவிக்கப்படும். நாங்கள் திமுகவிடம் சொல்லாமல் வரவில்லை. எங்கள் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி தலைவர் கனிமொழி ஆகியோரிடம் பேசி உள்ளார். இதற்கு பிறகு தான் முடிவு எடுத்தனர். சொல்லாமல் யாரும் வரவில்லை. நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்ற வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது. அது அவர்களின் விருப்பம். அதில் நாங்கள் தலையிட முடியாது, இவ்வாறு கூறினார்.
