×

விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண் எம்பி: மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை: மும்பை – புனே விரைவுச்சாலையில் நடந்த பயங்கர கார் விபத்தில் பாராமதி எம்.பி., சுப்ரியா சுலே காயமின்றி உயிர் தப்பினார். தேசியவாத கா்ங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் மகளான மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் சுப்ரியா சுலே (56). இவர் கடந்த 2022ம் ஆண்டில் நடந்த தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி விபத்திற்குப் பிறகு, சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று புனேவில் இருந்து மும்பைக்கு சுப்ரியா சுலே தனது காரில் பயணம் மேற்கொண்டார். ராய்காட் மாவட்டத்தின் மடப் சுரங்கப்பாதை அருகே கார் சென்று கொண்டிருந்த போது, லோனாவாலாவில் சுற்றுலா முடித்துவிட்டு குஜராத் நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார், எம்.பி., சென்ற காரின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் கதவு பலத்த சேதமடைந்த போதும், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் சுப்ரியா சுலே, அவரது டிரைவர் மற்றும் உதவியாளர் ஆகியோர் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குஜராத்தைச் சேர்ந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து சுப்ரியா சுலே கூறுகையில், ‘இந்த பயங்கரமான அனுபவம் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. அதிவேக பயணம் மற்றும் கவனக்குறைவு மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அனைவரும் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்’’ என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

Tags : Maharashtra ,MUMBAI ,PARAMATI M.P. ,PUNE EXPRESSWAY ,P. ,Supriya Sule ,Nationalist Congress Party ,Sarath Bawar ,Maharashtra State Parliamentarian Constituency ,M. ,
× RELATED மாநிலக் கட்சிகளின் முதுகில் சவாரி...