×

200 யூனிட் மின்சாரம் இலவசம் அறிவிப்பு; முதல்வர் ஜோசப் விஜய் போட்ட முதல் கையெழுத்தால் 90% மக்களுக்கு மின் கட்டணம் உயர்வு

சென்னை: 500 யூனிட்டுகள் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என்று முதல்வர் ஜோசப் விஜய் போட்ட முதல் கையெழுத்தால் தமிழகத்தில் 90 சதவீதம் மக்கள் ரூ.1000த்திற்கு மேல் மின் கட்டணம் கட்டும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரம் தேர்தலின் போது குடியிருப்புகளில் ஒவ்வொரு மாதமும் மின் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்த வாக்குறுதி இதன் மூலம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் குடியிருப்புகள், வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை மின் நுகர்வோர்களின் மொத்த எண்ணிக்கை 3.32 கோடி இணைப்புகள் உள்ளன. அதில் பெரும்பாலானவை குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. தமிழகத்தில் தற்போது தனிநபர் சராசரி மின் பயன்பாடு ஆண்டுக்கு 1,800 யூனிட்களாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றனர்.

மாநிலம் முழுவதும் தற்போது அனைத்து வகையான குடியிருப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்பட்டு வந்தது. அதேநேரம் தேர்தல் நேரத்தில் தவெக தலைவர் ஜோசப் விஜய் குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தற்போது எடுக்கப்படும் கணக்கெடுப்பு 2 மாதங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்படும் எனறு அறிவித்திருந்தார். இதனால் பொதுமக்களுக்கு மின்சார கட்டணம் தற்போது உள்ள கட்டணத்தை விட பாதியாக குறையும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் தற்போது தவெக தலைவர் ஜோசப் விஜய் இன்று காலை முதல்வராக பதவியேற்று தனது முதல் கையெழுத்து ‘ 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம்’ என போட்டுள்ளார். இது விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. தற்போது குடியிருப்புகளில் சாதாரணமாக 2 மாதங்களுக்கு 600 முதல் 700 யூனிட்கள் வரை மின்சாரம் செலவாகிறது. ஏன் என்றால் அனைத்து வீடுகளில் குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, குடிநீருக்கான மின் மோட்டார், சாதாரணமாக 5 விளக்குகள் வரை சாதாரண குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதுவே வசதியான வீடுகளில் ஏசி, ஓவன், அலங்கார விளக்குகள், தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் மின் மோட்டார், தற்போது மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் என அனைத்து வகையான மின்சாதனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஒவ்வொரு 2 மாதங்களுக்கு 1000 முதல் 2500 யூனிட்டுகளுக்கு மேல் வருகிறது.

பழைய நடைமுறைப்படி அனைத்து வகையான குடியிருப்புகளுக்கும் எந்த வித கட்டுப்பாடுகள் இன்றி, அதாவது, குடிசை வாசிகள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைத்து வீடுகளுக்கு ‘100 யூனிட்’ மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு. அவர்கள் வீடுகளில் பயன்படுத்தும் மொத்த மின்சார யூனிட்டுகளில் இலவசமாக வழங்கப்பட்ட 100 யூனிட் மின்சாரம் கழித்து மீதமுள்ள யூனிட்டுகளுக்கு மட்டும் மின்சார கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தற்போது முதல்வர் ஜோசப் விஜய் போட்ட முதல் கையெழுத்தால், தமிழகத்தில் குடிசைப்பகுதிகளில் உள்ள 10 சதவீதம் மக்கள் மட்டும் பயனடையும் வகையில் உள்ளது. இவர்கள் 2 மின் விளக்குகள், ஒரு மின்விசிறி பயன்படுத்தி வருகிறார். 500 யூனிட்டுகள் பயன்பாட்டில் உள்ள இவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவச மின்சாரம் பயனடைையும், நடுத்தர மக்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள 200 யூனிட் மின்சாரம் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், நடுத்தர மக்கள் அனைவரும் வீடுகளில் ஏசி பயன்படுத்துகிறார்கள். சராசரியாக ஒரு ஏசி பயன்படுத்தும் வீடுகளில் ஒரு நாளுக்கு 3 முதல் 4 யூனிட் மின்சாரம் ஏசி பயன்பாட்டிற்கே செல்கிறது. அதன்படி பார்த்தால் தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை தான் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால் ஒரு ஏசி பயன்படுத்தும் நடுத்தர மக்கள் சராசரியாக 240 யூனிட்கள் செலவாகிறது. அதுதவிர மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, விளக்குகள், டிவி, வாஷிங்மெஷின், குளிர்சாதன பெட்டி என அனைத்தும் சேர்த்தால் சராசரியாக 600 முதல் 700 யூனிட்டுகள் செலவாகிறது.

நிலைமை இப்படி இருக்க, முதல்வர் ஜோசப் விஜய் போட்ட முதல் கையெழுத்தால் நடுத்தர மக்களுக்கு மின்சார கட்டணம் ரூ.1000த்திற்கு மேல் உயர்ந்துள்ளது. வழக்கமாக 100 யூனிட் இலவச மின்சார கட்டணத்தால் நடுத்தர குடும்பங்கள் ரூ.500 முதல் ரூ.600 வரை கட்டிய வந்தனர். முதல்வரின் இந்த அறிவிப்பால் நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சராசரியாக நடுத்தர குடும்பங்களில் 10 வீடுகளில் 2 இடங்களில் மின்சார வாகனங்கள் உள்ளனர். இதனால் மின்சார வாகனங்கள் வைத்துள்ள அனைத்து நடுத்தர குடும்பங்களுக்கும் தற்போது மின்சார கட்டணம் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை அதிகரித்துள்ளது.

தவெக தலைவராக ஜோசப் விஜய் தேர்தல் நேரத்தில் ‘அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற முழக்கம்’ முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது தவெக தலைவர் ஜோசப் விஜய் முதல்வரான பிறகு தனது முதல் கையெழுத்து மூலம், ‘500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சார சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது’. இதன் மூலம், ஏழை எளிய குடும்பங்கள் மட்டும் அதிகளவில் பயனடைவார்கள், ஆனால் நடுத்தர குடும்பங்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

முதல்வர் கூறியபடி, ஒரு வீட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்குள் பயன்பாடு இருந்தால், அவர்கள் முதல் 200 யூனிட்டிற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மீதமுள்ள யூனிட்டுகளுக்கு மட்டும் மின்சாரம் கட்டணம் கட்டினால் போதும். இதுவரை தமிழகத்தில் அமலில் இருந்த நடைமுறைப்படி, எவ்வளவு யூனிட் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய அறிவிப்பின் படி, 500 யூனிட்டைத் தாண்டி மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இனி அந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் முற்றிலும் கிடையாது. குறிப்பாக 501 யூனிட் பயன்படுத்தும் குடும்பத்தினர், மொத்த யூனிட்டிற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதனால் நடுத்தர குடும்பங்களில் மின்சார கட்டணம் ரூ.1000 வரை அவர்களின் பட்ஜெட்டில் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலைவாய்ப்புக்காக தனது குடும்பங்களும் இடம் பெயர்ந்து வாடகையில் குடியிருக்கும் மக்களுக்கு இது மேலும் சுமையாக உருவெடுத்துள்ளது. தற்போது ஒவ்வொரு வாடகை தாரர்களும் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8 முதல் ரூ.10 வரை வீட்டின் உரிமையாளர் வசூலித்து வந்தார். அப்போது மொத்த யூனிட்டில் 100 யூனிட் மின்சாரம் கழித்தது போக….தற்போது இந்த புதிய நடைமுறையால் வாடகைக்கு குடியிருக்கும் பொதுமக்களுக்கு வீட்டின் உரிமையாளர் ஒரு யூனிட்டுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நகர் புறங்களில் வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இது பெரும் இடியாக உள்ளது. சொந்த வீடுகள் வைத்துள்ள ஏழை மற்றும் எளிய குடும்பங்களுக்கு மட்டும் 200 யூனிட் பொருந்தும்.

இதனால் தமிழகத்தில் குடிசைப்பகுதியில் வசிக்கும் 10 சதவீதம் மக்களுக்கு மட்டும் இந்த சலுகை பொருந்தும், நடுத்தர மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சார இணைப்பு முற்றிலும் கானல் நீராக மாறியுள்ளது. முதல்வராக ஜோசப் விஜய் போட்ட முதல் கையெழுத்தால் நடுத்தர குடும்பங்கள் அவர்களின் குடும்ப செலவீனங்களில் ரூ.1000 கூடுதல் செலவாக மின்சாரம் கட்டணம் உயர்ந்துள்ளதாக புலம்பி வருகின்றனர்.

Tags : Chief Joseph Vijay ,Chennai ,Tamil Nadu ,
× RELATED என்னை முதல் சேவகனாக்கிய தமிழக மக்களுக்கு நன்றி..!