சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் தெரிவித்துள்ளது. குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உடனடி காஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்துடன் இணைந்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குழாய் வழி எரிவாயு இணைப்பு வழங்கி, அந்த குடியிருப்பை எல்.பி.ஜி இல்லா குடியிருப்பு என சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி அலுவலர் குடியிருப்பு, விக்டோரியா டவர், எம்பஸி ரெசிடென்சி, பொல்லினேனி பேஸ் 1,2,3 மற்றும் அர்பன் ரைஸ் ரெவல்யூஷன் ஆகிய குடியிருப்புகளில் அடங்கிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு 100 சதவீதம் இந்த குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது. இதற்கான எல்.பி.ஜி. ப்ரீ ஸோன் எனப்படும் எல்.பி.ஜி. இல்லா பகுதி என்ற சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திங்க் காஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மண்டல தலைவர் திருக்குமரன் கூறுகையில், ‘இந்த எல்.பி.ஜி ப்ரீ ஸோன் அறிவிப்பின் மூலம், குடியிருப்புகளுக்கான குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டை விரைவுபடுத்தவும், குழாய் எரிவாயு வசதி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். இந்த குடியிருப்புகளில் மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பு எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. மேலும் பல குடும்பங்கள் எவ்வித சிரமமுமின்றி குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாறுவதற்கு முழு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றார்.
சான்றிதழினை வழங்கி பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் துணை இயக்குநர் அசுதோஷ் பட் கூறுகையில், `இந்தப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு பயன்பாட்டை பயன்பாட்டை ஊக்குவிக்க திங்க் கேஸ் நிறுவனம் எடுத்துள்ள முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம்.
எல்.பி.ஜி ப்ரீ ஸோன்களை அறிவிப்பது, விழிப்புணர்வை வலுப்படுத்துவதிலும், மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும், நகர எரிவாயு கட்டமைப்பின் பரந்த வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது, அடுக்குமாடி குடியிருப்புகள் முழுவதையும் குழாய் வழி காஸ் பயன்படுத்தும் வகையில் ஊக்குவிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.
வரும் மாதங்களில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதி முழுவதும் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று `திங்க் காஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகளவில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பை பெறும் மேலும் பல குடியிருப்புகளுக்குச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கவும் திட்டமிட்டுள்ளது.
