- என்.எஸ்.ராஜா சுப்ரமணி
- முப்படைகளின் தலைவர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- லெப்டினென்ட் ஜெனரல்
- அனில் சௌஹான்
புதுடெல்லி: புதிய முப்படை தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவடைந்த நிலையில் இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் புதிய முப்படை தலைமை தளபதியாக மிக மூத்த ராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணியை ஒன்றிய அரசு நேற்று நியமித்துள்ளது. 1985ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்த ராஜா சுப்பிரமணி 40 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
பாகிஸ்தான் மற்றும் சீனா விவகாரங்களில் நிபுணராக அறியப்படும் ராஜா சுப்பிரமணி, கடந்த ஆண்டு ஜூலை 31ல் ராணுவ துணைத் தலைமை தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்தார். நாட்டின் 3வது முப்படை தலைமை தளபதியாக அவர் வரும் 30ம் தேதி பொறுப்பேற்பார். இத்துடன், ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் ராஜா சுப்பிரமணி செயல்பாடுவார் என பாதுகாப்பு அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. முதலில் இப்பதவியில் பொறுப்பேற்ற பிபின் ராவத் கடந்த 2021ல் தமிழ்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் பிறந்தவரான ராஜா சுப்பிரமணி தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். பிராக்னெல் (இங்கிலாந்து) கூட்டு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி மற்றும் டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் எம்பில் பட்டமும் பெற்றுள்ளார்.
அசாமில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் 16 கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவுக்கும், ஜம்மு காஷ்மீரில் 168 காலாட்படை பிரிகேடுக்கும், மற்றும் சவாலான செயல்பாட்டுச் சூழலில் மத்தியப் பகுதியில் 17 மலைப் பிரிவுக்கும் மேற்கு முனையில் ராணுவத்தின் முதன்மையான தாக்குதல் படைப்பிரிவு உட்பட 2 படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்கி சிறந்து விளங்கினார். மேற்கு, வடக்கு எல்லை இரண்டிலும் ஆழ்ந்த அனுபவர் கொண்டவர் ராஜா சுப்பிரமணி என பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* கடற்படை தளபதியாக சுவாமிநாதன் நியமனம்
தற்போதைய கடற்படை தளபதியாக உள்ள தினேஷ் குமார் திரிபாதியின் பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய தளபதியாக துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1987ல் கடற்படை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கிருஷ்ண சுவாமிநாதன், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் உத்தியில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது, மேற்கு கடற்படை தளத்திற்கு தலைமை தாங்கும் சுவாமிநாதன் பெங்களூருவை சேர்ந்தவர். இவர் வரும் 31ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
