×

நடிகரின் ரூ.30,000 கோடி சொத்து தகராறை தீர்க்க மாஜி தலைமை நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

 

புதுடெல்லி: மறைந்த தொழிலதிபரும் பாலிவுட் நடிகருமான சஞ்சய் கபூர் குடும்பத்தினர் இடையேயான 30,000 கோடி ரூபாய் சொத்து பிரச்னையை தீர்க்க முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த பிரபல தொழிலதிபரான பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் குடும்பத்தில், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மற்றும் குடும்ப அறக்கட்டளையை நிர்வகிப்பது தொடர்பாக நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளை, போலியான மற்றும் மோசடியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று சஞ்சய் கபூரின் தாய் ராணி கபூர் குற்றம் சாட்டினார்.

இதனை செல்லாது என அறிவிக்கக் கோரி அவர் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அறக்கட்டளை சொத்துகளை மாற்றக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சஞ்சய் கபூரின் மனைவி பிரியா கபூர் உள்ளிட்டோர் பதிலளிக்க கடந்த ஏப். 27ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த சொத்து விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைக்க முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அவர்களை மத்தியஸ்தராக உச்ச நீதிமன்றம் நியமித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இது ஒரு குடும்பப் பிரச்னை. இதனை குடும்பத்திற்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். இது மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக மாறக்கூடாது’ என்று தெரிவித்தனர். சந்திரசூட் முன்னிலையில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்த முதற்கட்ட அறிக்கையை பெற்று வரும் ஆகஸ்ட் மாதம் வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : Former Chief Justice ,Supreme Court ,New Delhi ,D.Y. Chandrachud ,Bollywood ,Sanjay Kapoor ,Sanjay Kapoor's… ,
× RELATED தென்னிந்திய நடிகர் நடிகைகளுக்கு...