×

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: சமூக ஊடக முகப்பு படத்தை மாற்றிய பிரதமர், அமைச்சர்கள்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஓராண்டு நிறைவையொட்டி பிரதமர் மோடி தன் சமூக ஊடக பக்கங்களின் முகப்பு படத்தை மாற்றி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து கடந்த மே 7ம் தேதி, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு நேற்று கொண்டாடப்பட்டது.

இதனை பெருமைப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி தன் எக்ஸ், முகநூல், வாட்ஸ்அப் சேனல்கள் ஆகிய சமூக ஊடக பக்கங்களின் முகப்பு படத்தை மாற்றி உள்ளார். அந்த படத்தில் மூவர்ண தேசிய கொடியும், சிந்தூர் என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள ஒரு ஓ எழுத்தில் குங்குமம் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “ஓராண்டுக்கு முன்பு நமது ஆயுத படைகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் தங்கள் வீரத்தை வௌிப்படுத்தி, நம் மக்களை தாக்கியவர்களுக்கு உறுதியான பதிலடி கொடுத்தன. இதனால் ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் ஆயுத படைகளை பற்றி பெருமைப்படுகிறோம். நமது படைகளுக்கும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அவர்கள் அடைந்த வெற்றிக்கும் மரியாதை செலுத்தும் விதமாக நாம் அனைவரும் எக்ஸ், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களின் முகப்பு படத்தை மாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

முகப்பு படத்தை மாற்றிய அமைச்சர்கள்
பிரதமர் மோடியின் வேண்டுகோளையேற்று, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் சமூக ஊடக முகப்பு படத்தை மாற்றி உள்ளார். மேலும், “ஆபரேஷன் சிந்தூர் தேசிய உறுதி, தயார்நிலையின் சக்திவாய்ந்த சின்னமாக உள்ளது. இந்திய ஆயுத படைகளின் துல்லியமான தாக்குதல்கள், அவர்களின் செயல்திறனை பிரதிபலிக்கிறது. நவீன ராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு சிறந்த அடையாளம்” என பாராட்டி உள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முகப்பு படங்களை மாற்றி, “ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் ஒரு சகாப்த பணியாக நிற்கிறது. இது நமது ஆயுத படைகளின் துல்லியமான, தவறிழைக்க முடியாத தாக்கும் சக்தியை நம் எதிரிகளுக்கு எப்போதும் நினைவூட்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், கஜேந்திர சிங் ஷெகாவத், தர்மேந்திர பிரதான், அஷ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ், அன்னபூர்ணா தேவி, சி.ஆர்.பாட்டீல் உள்ளிட்டோரும் தங்களின் சமூக ஊடக பக்கத்தின் படங்களை ஆபரேஷன் சிந்தூரை குறிக்கும் விதமாக மாற்றி உள்ளனர்.

பாகிஸ்தான் இன்னும் தனிமைப்படுத்தப்படவில்லை: காங்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடி நமது ஆயுதப்படைகளின் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் இந்த வேளையில் பின்வருவனவற்றை நினைவுகூர்வது பயனுள்ளதாக இருக்கும். எதிர்பாராதவிதமாக ஆபரேஷ் சிந்தூரை நிறுத்திய போர் நிறுத்தம் குறித்த முதல் அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ 2025ம் ஆண்டு மே 10ம் தேதி இந்திய நேரப்படி மாலை 5.37மணிக்கு வெளியிட்டார். அதிபர் டிரம்பின் தலையீடே இதனை சாத்தியமாக்கியது. அதன் பிறகு அதிபர் டிரம்ப் இந்த கூற்றை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பல்வேறு நாடுகளில் திரும்ப திரும்பக் கூறியுள்ளார். ஆனால் அவரது நல்ல நண்பரான பிரதமர் மோடியால் ஒரு முறை கூட அது மறுக்கப்படவில்லை. 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின் ஏற்பட்டது போல பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படவில்லை. மாறாக அதன் ராணுவத் தளபதியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அசாதாரணமான அன்புடன் வரவேற்றுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.

Tags : Indian Army ,Operation Sindhupalla ,Pakistan ,PM ,New Delhi ,Modi ,Pahalgam ,Jammu and ,Kashmir ,
× RELATED பீகாரில் அதிர்ச்சி சம்பவம் – மதிய...