பாட்னா: பீகாரில் பாஜ தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. இதில் 32 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பீகாரில் பாஜ தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசில் மொத்தம் 32 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலத்தில் உள்ள ஐந்து கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 32 பேருக்கு ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் பதவியில் இருந்து விலகி மாநிலங்களவைக்கு சென்ற ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமாரும் அமைச்சராகி இருக்கிறார். பாஜவை சேர்ந்த 15 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். பதவியேற்றவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
