சென்னை: தமிழக ஆளுநர்- பாஜவை கண்டித்து காங்கிரஸ் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் தனிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனது. கூட்டணி என விஜய் குறிப்பிட்டு இருப்பதால் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால் 118 இடங்கள் தவெகவிடம் இல்லை என்பதால் விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டது. இதற்கு பலதரப்புகளில் இருக்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் தவெக ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜ மற்றும் அவர்களின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார். அவர்களின் இந்த செயல்பாட்டை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.
அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஒருபக்கம் தவெகவினர் ஆளுநரை எதிர்க்கவே இல்லை என கருத்துகள் வந்த வண்ணம் இருக்கின்றன. கம்யூனிஸ்ட், விசிக மற்றும் காங்கிரஸ் போன்ற காட்சிகள் ஆளுநரை எதிர்த்து வரும் நிலையில் தவெக அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியையும் சிலர் முன் வைத்து வருகின்றனர். தவெக அமைதி காட்டும் நிலையில் காங்கிரஸ் முட்டு கொடுத்து வருவது தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
