சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பாஜ ஏஜென்டாக செயல்படுகிறார் என மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கூறினார். டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். அவர் சட்டம் அறிந்திருப்பார் என நினைத்தேன். ஆனால் பாஜ ஏஜென்டாக செயல்படுகிறார். ஆளுநர் அதிமுக – தி.மு.க இணைய வேண்டும் என தாமதம் செய்கிறார் என பத்திரிகை செய்தி மூலம் அறிந்தேன். தேர்தலுக்கு பின்பு எவருக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லை என்றால், எந்த கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதோ அவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். பெரும்பான்மையை ஆளுநர் அலுவலகத்தில் நிரூபிக்க வேண்டியது இல்லை. மாறாக ஆட்சி அமைக்க அழைத்து பின்னர் சட்டமன்றத்தில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லை என்றாலும், சட்டமன்றத்தில் வேறு கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணித்தார்கள் என்றாலும் பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சி தொடர முடியும்.
ஆளுநர் பாஜவின் நடவடிக்கைக்காக காலம் தாழ்த்துகிறார். பெரும்பான்மை உறுப்பினர்கள் பட்டியலை கேட்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சட்ட நிவாரணம் கோரி தவெக எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம். ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும். இவ்வாறு கூறினார்.
