மகாராஷ்டிராவில் பரபரப்பு – காவல்துறையின் அதிரடி சோதனையில் 4,700-க்கும் மேற்பட்ட கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்…

நாந்தேட்: மகாராஷ்டிர மாநிலத்தில் நாந்தேட் (Nanded) என்ற நகரில் உள்ள வஜிராபாத் என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் ஆயிரக்கணக்கான வாள்கள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் மிகப்பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நாந்தேட் கிராமப்புறக் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு, ராம்தாஸ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத குடோன் ஒன்றில் தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அங்கிருந்து சுமார் 4,796 கூர்மையான ஆயுதங்களை அதிகாரிகள் குழுவினர் மீட்டெடுத்தனர்.

அதிகாரிகள் கைப்பற்றிய ஆயுதங்களில் பெருமளவில் வாள்கள், கத்திகள் மற்றும் அரிவாள்கள் போன்றவை இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களின் மதிப்பு சுமார் ரூ. 43.5 லட்சம் ஆகும். இவை கொலம்பியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட உயர்தர (Import quality) ஆயுதங்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, 50 வயதான ஜஸ்வந்த் சிங் பிரகாஷ் சிங் சுக்மணி என்பவரை காவலர்கள் கைது செய்தனர். நாந்தேடு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 70 மணி நேரத்திற்குள் 5 கொலைகள் நடந்தன.

உள்ளூர் ரவுடி கும்பல்களுக்கு இடையே நிலவும் மோதலைத் தொடர்ந்து, குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக இந்த அதிரடி சோதனையை காவல்துறை கண்காணிப்பாளர் அபிநாஷ் குமார் தலைமையிலான குழு நடத்தியது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் சில மத வழிபாட்டுச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படுபவை என்றாலும், பெரும்பாலானவை குற்றச் செயல்களுக்காகவே பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸார் கருதுகின்றனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: