திருமங்கலம், மே 7: டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வன்னிவேலம்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் (39). இவரது மனைவி கஞ்சம்மாள். இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தற்போது திருமங்கலத்தினை அடுத்த நடுவக்கோட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் திருமங்கலத்திற்கு வேலைக்கு சென்று விட்டு சந்திரன் நடுவக்கோட்டை வீட்டிற்கு திரும்பினார். திருமங்கலம்- சேடபட்டியை ரோட்டினை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு வேளை என்பதால் மோதிய வாகனம் தப்பி சென்று விட்டது.
நேற்று அதிகாலை 2 மணிக்கு அந்த பகுதியில் நடந்து சென்றவர்கள் சாலையோரத்தில் ஒருவர் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சந்திரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நள்ளிரவில் அந்த வழியாக சென்ற வாகனங்களை கண்காணிப்பு காமிராக்கள் மூலமாக கண்காணித்து விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தினை தேடி வருகின்றனர்.
