118 எம்எல்ஏக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும்; விஜய்க்கு ஆளுநர் திடீர் நிபந்தனை: நாளை பதவி ஏற்பு நடைபெறுவதில் தொடர்ந்து சிக்கல்

 

சென்னை: நடிகர் விஜய் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாதநிலையில், 118 எம்எல்ஏக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். இதனால் நாளை பதவி ஏற்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பைச் சுற்றி அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி வெற்றியை பதிவு செய்தாலும், 118 என்ற பெரும்பான்மை இலக்கை எட்ட முடியாமல் திணறுகின்றனர். ஆனால் தனி மெஜாரிட்டி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்கும்படி விஜய், தமிழக கவர்னருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதேநேரத்தில் மெஜாரிட்டியை பெறும் வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார். தற்போது காங்கிரஸ் மட்டுமே வெளிப்படையாக ஆதரவு அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. விசிக, இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆதரவு அளிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த சூழலில், தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்க உள்ளார். ஆட்சி அமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகளின்படி, தவெகவுக்கு அடுத்ததாக திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும் பெற்றுள்ளன. இந்நிலையில் ஆட்சி அமைப்பதற்கான விஜய்க்கு இரண்டு முக்கிய வாய்ப்புகளை ஆளுநர் முன்வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தவெக மற்ற கட்சிகளின் ஆதரவை திரட்டி 118 என்ற எண்ணிக்கையை எட்டினால், அரசு அமைக்க அழைப்பு வழங்கப்படும். ஆட்சி அமைக்க அழைக்குமாறு விஜய் கடிதம் அனுப்பி உள்ளார், மெஜாரிட்டியாக 35% வாக்குகளை பெற்றுள்ளதாக விஜய் கடிதத்தில் கூறியுள்ளார். மேலும், தவெக குறைந்தபட்ச அரசை அமைக்கும் முயற்சியும் மேற்கொள்ளலாம்.

இந்த முறையில், முழுமையான பெரும்பான்மை இல்லாத நிலையிலும் அரசு அமைக்க முடியும். ஆனால், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு பிற கட்சிகளின் தொடர்ந்த ஆதரவு தேவைப்படும். இதற்கிடையில், தவெகவுக்கு அரசியல் கணக்கில் சிக்கல் உருவாகியுள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதனால் கட்சியின் எண்ணிக்கை 107 ஆக குறையும். மேலும், சபாநாயகர் நியமனம் காரணமாக வாக்குரிமை குறையக்கூடும். இதனால் செயல்பாட்டு எண்ணிக்கை 106ஆக குறையும். இதனால், தவெக உண்மையில் குறைந்தது 12 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவை பெற்றாலே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் தவெக தேவையான ஆதரவை திரட்ட முடியாதபட்சத்தில், அடுத்த பெரிய கட்சியான திமுகவுக்கு ஆளுநர் வாய்ப்பு அளிக்கலாம். அப்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமைத்து பெரும்பான்மையை எட்டினால், அவர்கள் ஆட்சி அமைக்கும் சூழலும் உருவாகலாம். ஆனால் திமுக ஆட்சி அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியதாவது : ஆட்சி அமைக்க அழைக்குமாறு விஜய் கடிதம் அனுப்பி உள்ளார். மெஜாரிட்டியாக 35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக விஜய் கூறியுள்ளார். 118 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை வேண்டும் என கேட்டுள்ளேன்.

எம்எல்ஏக்களின் எண்ணிக்கை விவரத்தை சொல்வதாக விஜய் கூறியுள்ளார். 118 அல்லது மேற்பட்ட எம்எம்எல்ஏக்கள் ஆதரிப்பதாக நிரூபிக்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு என பல ஆப்ஷன்கள் உள்ளன. அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டு முடிவு எடுப்பேன். குறிப்பிட்ட காலத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உத்தரவிடலாம். இவ்வாறு தமிழக ஆளுநர் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு பட்டியல் வேண்டும் என்று கேட்டுள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெக தற்போது 108ல் ஒரு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழலில் 107 எம்எல்ஏக்களுடன் மேலும் 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.

காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தர தயாராக உள்ளது. இதனால் விசிக, 2 கம்யூனிஸ்ட் களின் ஆதரவு கடிதம் கிடைத்த பிறகே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பதால் உடனடியாக பதவி ஏற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக நாளை நல்ல நாள் என்று ஜோதிடர் கணித்துள்ளதால், அந்த நாளுக்குள் பதவி ஏற்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை நாளை மறுநாள் முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளதால், பதவி ஏற்பதில் தொடர்ந்து சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: