மேற்குவங்கத்தில் 7ம் தேதி, அசாமில் 9ல் பாஜக அரசு பதவியேற்பு?

 

கொல்கத்தா: மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக புதிய அரசு அமைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேற்குவங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அந்த ஆட்சியை வீழ்த்தி பாஜக முதல்முறையாக 206 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த இந்த வெற்றியைக் கொண்டாட அக்கட்சியினர் தற்போது தயாராகி வருகின்றனர். மேற்கு வங்க சட்டசபையின் பதவிக்காலம் வரும் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, வரும் 7ம் தேதி அல்லது 8ம் தேதியன்று புதிய அரசு பதவியேற்க வாய்ப்புள்ளது. இதற்கான தேர்தல் நடைமுறைகளை தேர்தல் ஆணையம் நாளையுடன் (மே 6) முடிக்க திட்டமிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானம் அல்லது ராஜ் பவனில் பிரம்மாண்டமாக நடக்க உள்ள இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரி, முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்தது. தற்போது நடந்த தேர்தலில், மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 101 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் பாஜக மட்டும் தனியாக 82 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அசாம் மாநிலத்தின் தற்போதைய சட்டசபையின் ஆயுட்காலம் வரும் 20ம் தேதியுடன் முடிகிறது.

இருப்பினும், அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளதால் வரும் 9ம் தேதி அல்லது 10ம் தேதியன்று புதிய அமைச்சரவை பதவியேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மாநில முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். இதனிடையே, இரு மாநிலங்களிலும் சட்டசபை குழு தலைவரை தேர்ந்தெடுக்க விரைவில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்திய பின் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: