டெல்லி: நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த ஏஜென்ட் உள்பட 4 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். மோசடி கும்பலிடம் சிக்கிய 18 மாணவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் ரூ.30 லட்சம் மதிப்பிலான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்களை ஏமாற்றி பணம் பறித்த 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். நீட் தேர்வுக்கான வினாத்தாளை முன்கூட்டியே வழங்குவதாகக் கூறி 18 மாணவர்களிடம் பேரம் பேசியுள்ளனர்.
பின்னர் 18 மாணவர்களையும் முதல் நாள் இரவு பெற்றோரிடமிருந்து தனியாக வரவழைத்து ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். நீட் தேர்வில் தொடர்ந்து மோசடிகள் அரங்கேறி வருவதால் பலரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் டெல்லியில் மோசடியில் ஈடுபட இருந்த நான்கு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் குஜராத் மாநிலம் சுரத்தை சார்ந்த வினோத் பாட்டியா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மூலம் தான் முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது. அதாவது 3ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.
அந்த முதல்நாள் இரவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனைகளில் ஈடுபட்டனர். டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியாக காசியாபாத் அருகே ஒரு இடத்தில் மூன்று மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சோதனை நடத்தியதில் மற்றொரு இடத்தில் 18 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மாணவர்களிடம் கைப்பற்றப்பட்ட சான்றிதழ்களும் போலீசார் மீட்டு கொடுத்தனர்.
