கடும் போட்டிக்கு மத்தியில் சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் திலீபன் ஜெய்சங்கர் வெற்றி

தென்காசி, மே 5: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திலீபன் ஜெய்சங்கர் 6,489 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சங்கை கணேசன், அதிமுக சார்பில் திலீபன் ஜெய்சங்கர், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ராமராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவிதா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 82 வாக்காளர்கள் உள்ள நிலையில் நடந்த முடிந்த தேர்தலில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 948 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் அதிமுக வேட்பாளர் திலீபன் ஜெய்சங்கர் 64,865 வாக்குகளும், சங்கை கணேசன் 42,567 வாக்குகளும், ராமராஜன் 58,376 வாக்குகளும், கவிதா 12,767 வாக்குகளும் பெற்றனர். நோட்டா 560 பதிவாகியிருந்தது.

நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே தவெக முன்னிலை வகித்து வந்தது. ஆனால் கடைசி 4 சுற்றுகளில் அதிமுக கூடுதல் வாக்குகள் பெற்றது. இதன் மூலம் அதிமுக வேட்பாளர் திலீபன் ஜெய்சங்கர் 6,489 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் ராஜா எம்எல்ஏ போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இந்த தொகுதியை கைப்பற்றியது. தற்போது இந்த தொகுதியை திமுக கூட்டணி கட்சியான காங்கிரசிற்கு ஒதுக்கியிருந்தது. இந்த தேர்தலில் மீண்டும் களம் கண்ட அதிமுக தொகுதியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: