207 தொகுதிகளை கைப்பற்றி மேற்கு வங்கத்தில் பாஜ அமோக வெற்றி: முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜ 207 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றியுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களை கைப்பற்றி தோல்வி அடைந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. 4வது முறையாக ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார்.

பாஜ முதல் முறையாக ஆட்சியை கைப்பற்ற பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் மிகத்தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டிக்கு மத்தியில், வாக்குப்பதிவில் வரலாறு காணாத வகையில் 92.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 23 அமைச்சர்கள் பின்னடைவு: இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

பால்டா தொகுதியில் முறைகேடு குற்றச்சாட்டால் வரும் 21ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால், 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில், தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே பாஜ முன்னிலை பெறத் தொடங்கியது. பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. 23 சிட்டிங் அமைச்சர்களே கடும் பின்னடைவை சந்தித்தனர்.

ஆட்சியை கைப்பற்றியது பாஜ: இதனால், பகல் 12 மணியிலேயே பெரும்பான்மைக்கு தேவையான 148 இடங்களை பாஜ கட்சி தாண்டியது. இதனால் பாஜ அலுவலகங்களில் வெற்றி கொண்டாட்டங்கள் களை கட்டின. தொடர்ந்து முன்னிலை பெற்ற பாஜ, 207 தொகுதிகளில் வென்று, முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களையும், காங்கிரஸ் 2, ஹூமாயூன் கபீர் தலைமையிலான ஏஜேயுபி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஏஐஎஸ்எப் தலா 1 இடங்களில் வெற்றி பெற்றன. அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் 12 தொகுதிகளில் போட்டியிட்டு பல இடங்களில் 5ம் இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது.  முதல்வர் யார்? பாஜ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில், பாஜ மாநில தலைவர் சுவேந்து அதிகாரிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு வரையிலும் மேற்கு வங்கத்தில் ஒற்றை இலக்கு சீட்களை மட்டுமே வென்று வந்த பாஜ, 2021 தேர்தலில் 77 இடங்களை பிடித்து எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அடுத்த 5 ஆண்டுகளில் இம்முறை 206 தொகுதிகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜ வாக்கு சதவீதம் கடந்த 2021ல் 38 சதவீதமாக இருந்த நிலையில் இம்முறை 45 சதவீதகமாக அதிகரித்தது. திரிணாமுல் காங்கிரசின் வாக்கு சதவீதம் 48ல் இருந்து 40.94 சதவீதமாக சரிவடைந்தது.

* மம்தா வீட்டின் முன் ஜெய் ஸ்ரீராம் கோஷம்
வாக்கு எண்ணிக்கையில் பாஜவின் வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் சிலர் காளிகட் பகுதியில் அமைந்துள்ள முதல்வர் மம்தா வீட்டின் முன்பாக குவிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

* காங். 2, மார்க்சிஸ்ட் 1 இடங்களில் வெற்றி
மேற்கு வங்கத்தில் பாஜ எழுச்சிப் பிறகு மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி மிகவும் சுருங்கி விட்டது. 2016ல் காங்கிரஸ் 44 சீட்களை வென்ற நிலையில் கடந்த தேர்தலில் 9 இடங்களை கைப்பற்றியது. இம்முறை அதுவும் குறைந்து வெறும் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 294 தொகுதியிலும் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ராணிநகர், பராக்கா ஆகிய 2 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி உள்ளது.

பஹராம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பாஜ வேட்பாளர் சுப்ரதா மைத்ராவிடம் தோல்வியை சந்தித்தார். 252 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் டாம்கல் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஏஐஎஸ்எப் கட்சியின் முகமது நவ்சாத் சித்திக் பான்கர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

* ‘தாமரை மலர்ந்தது’ பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி நேற்று எக்ஸ் தளத்தில் ‘மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தது’ என பதிவிட்டார். அதில் அவர், ‘‘2026ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் என்றென்றும் நினைவுகூரப்படும். மக்கள் சக்தி மேலோங்கியுள்ளது. பாஜவின் நல்லாட்சி அரசியல் வெற்றி வாகை சூடியுள்ளது. மேற்கு வங்க மக்கள் ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன். பாஜவிற்கு பிரம்மாண்டமான வெற்றியை வழங்கியுள்ளனர்.

மேற்கு வங்க மக்களின் கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்ற, எங்கள் கட்சி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று உறுதியளிக்கிறேன். சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்புகளையும் கண்ணியத்தையும் உறுதிசெய்யும் அரசாங்கத்தை நாங்கள் வழங்குவோம். மேற்கு வங்கத்தில் பாஜ பெற்றுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி, தலைமுறை தலைமுறையாக எண்ணற்ற கட்சித் தொண்டர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் போராட்டங்களும் இல்லாமல் சாத்தியமாகியிருக்காது.

அவர்கள் அனைவருக்கும் நான் என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். பல ஆண்டுகளாக, அவர்கள் களத்தில் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து விதமான இடர்களையும் கடந்து, எங்களின் வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்துள்ளனர். அவர்களே எங்கள் கட்சியின் பலம்’’ என கூறி உள்ளார்.

* அரசு கோப்புகளை பாதுகாக்க உத்தரவு
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தலைமைச் செயலாளர் துஷ்யந்த் நரியாலா, தலைமைச் செயலகத்தில் அரசு கோப்புகள், ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து துறை செயலாளர்கள், அலுவலக தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவில், ‘உரிய அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு முக்கிய ஆவணத்தையோ அல்லது கோப்புகளையோ எந்தச் சூழ்நிலையிலும் அலுவலகங்களிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படக்கூடாது. அங்கீகாரம் இல்லாமல் எந்த கோப்புகளையும், ஆவணங்களையும் யாரும் நகலெடுப்பது, ஸ்கேன் செய்வது தடை விதிக்கப்படுகிறது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

* பெண் மருத்துவரின் தாய் வென்றார்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாய் ரத்னா தேப்நாத், பாஜ வேட்பாளராக பானிஹாட்டி தொகுதியில் போட்டியிட்டார். திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் திர்தங்கர் கோஷை எதிர்த்து போட்டியிட்ட ரத்னா தேப்நாத் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

* வெற்றி ஊர்வலங்களுக்கு தடை
வாக்கு எண்ணிக்கைக்கு நடுவே, மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மாநிலத்தில் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு வேட்பாளரின் வெற்றி ஊர்வலத்திற்கும் அனுமதிக்க வேண்டாம் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் எதுவும் நடக்கக் கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெற்றி ஊர்வலங்கள் நாளையிலிருந்து (இன்று) அனுமதிக்கப்படும். இதற்கு அரசியல் கட்சிகள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் முன் அனுமதி பெற வேண்டும். மாநிலத்தில் தேர்தலுக்கு பின் எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை. எந்த பகுதியிலும் தேர்தல் தொடர்பான உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை’’ என்றார்.

* திரிணாமுல் காங். அலுவலகங்கள் சூறை
பாஜ அமோக வெற்றி பெற்றததைத் தொடர்ந்து மேற்கு வங்கம் முழுவதும் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள், பதாகைகள், தோரணங்கள் ஆகியவை நேற்று சூறையாடப்பட்டன.

பாஜ குறிப்பிடத்தக்க இடங்களில் முன்னிலை பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பாருய்பூர், கூச் பெஹாரில் உள்ள துபான்கஞ்ச், வடக்கு 24 பர்கனாசில் உள்ள பானிஹாட்டி ஆகிய இடங்களில் தங்கள் அலுவலகங்களுக்கு வெளியே சமூக விரோதிகள் குவிந்து சூறையாடியதாக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டினர். அங்கிருந்த மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட கட்சி தலைவர்களின் படங்கள் கிழித்து தரையில் வீசப்பட்டன. ஆனால் இந்த சம்பவங்களில் தங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என பாஜ மறுத்துள்ளது.

* மம்தாவின் 15 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது
காங்கிரசிலிருந்து பிரிந்து கடந்த 1998ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மம்தா பானர்ஜி நிறுவினார். அதன் பின், 2001, 2006ம் ஆண்டுகளில் 2 சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் 2011ல் முதல் முறையாக ஆட்சியை பிடித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்பு கோட்டையை தகர்த்து முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி 2016, 2021ல் ஆட்சியில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றார். இம்முறை 4வது முறையாக ஆட்சியை பிடிக்கும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்து மம்தாவின் 15 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.

* மீண்டும் தோற்றார் மம்தா
முதல்வர் மம்தா பானர்ஜி – பாஜ மாநில தலைவர் சுவேந்து அதிகாரி நேருக்கு நேர் போட்டியிட்ட பவானிபூரில் கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று முடிவில் மம்தா 1,996 வாக்குகள் முன்னிலை பெற்ற நிலையில், 2வது சுற்றில் சுவேந்து அதிகாரி 1,558 வாக்குகள் முந்தினார். பின்னர் 3வது சுற்றில் மீண்டும் முன்னிலைக்கு மாறிய மம்தா தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

14வது சுற்று முடிவில் மம்தா 48,671 வாக்குகளுடன் 3,830 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் 16வது சுற்று முடிவில் சுவேந்து 554 வாக்குகள் முன்னிலை பெற்றார். 18வது சுற்று முடிவில் 11,000 வாக்குகள் முன்னிலை பெற்ற சுவேந்து, 20வது மற்றும் கடைசி சுற்றில் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 2021 தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரி மீண்டும் இம்முறையையும் மம்தாவை வென்றுள்ளார். மற்றொரு தொகுதியான நந்திகிராமில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி 1.15 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மம்தா அளித்த பேட்டியில், ‘‘100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜ வாக்குகளை திருடியிருக்கிறது. பெரும் திருட்டு நடந்திருக்கிறது’’ என குற்றம்சாட்டினார்.

Related Stories: