திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க பல்வேறு இடங்களில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நடமாடும் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களை கோடைக்கால நெருக்கடியில் இருந்து பாதுகாக்க திருமலை தேவஸ்தானத்தின் பொறியியல் துறையின் மேற்பார்வையில் சுமார் ரூ.2 கோடி செலவில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாட்ட கங்கம்மா கோயில் சந்திப்பு முதல் கோகர்பம் அணை வழியாக வெளிவட்டச் சாலை வரை நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வைகுண்டம் வரிசை வளாகம்-2, அருங்காட்சியக வளாகம் மற்றும் நாராயணகிரி பூங்கா ஆகிய இடங்களிலும் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்காக குளிர்ச்சியான வண்ண பெயிண்ட் பணிகள் மற்றும் கூடுதல் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கோயில், லட்டு விற்பனையகங்கள் மற்றும் அதிக பக்தர்கள் கூடும் பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் நிழற்பந்தல்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், நான்கு மாட வீதிகளில் செயற்கை எனாமல் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. வெளிவட்டச்சாலை வரை அமைக்கப்பட்டுள்ள வரிசைகளில் தற்காலிகக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், திருமலையின் நெரிசலான பகுதிகளில் வாரி சேவகர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தான சுகாதாரத்துறையின் உதவியுடன், நடமாடும் தண்ணீர் குழாய் பயன்படுத்தி அவ்வப்போது பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஸ்ரீவாரி சேவகர்கள் நேரடியாக பக்தர்களிடம் சென்று குடிநீர் வழங்கி வருகின்றனர். ஒரு குழுவுக்கு 15 பேர் என மொத்தம் 45 வாரி சேவகர்கள் தினமும் 3குழுக்களாகப் பிரிந்து பக்தர்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர்.
திருமலையில் பக்தர்களுக்காக மொத்தம் 16 மருத்துவ மையங்கள் உள்ளன. இந்த இடங்களில் பக்தர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, வெளிவட்டச் சாலையில் உள்ள வரிசைகளுக்கு பின்னால் ஒரு நடமாடும் முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாராயணகிரியிலும் ஒரு முதலுதவி மையம் அமைக்கப்படுகிறது. கோடைக்கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் லட்டுகள் பக்தர்களுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண நாட்களில் 3.50 லட்சம் லட்டுகள் வழங்கப்படும் நிலையில், தற்போது கூடுதலாக 3.50 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
