நன்றி குங்குமம் தோழி
வில்வித்தை வீராங்கனை என்றாலே தன்னம்பிக்கையான தோற்றத்துடன் ஷீத்தல் தேவிதான் முதலில் நினைவுக்கு வருவார். வில் வித்தையில் நம்பர் 1 வீரரான ஷீத்தல் தேவியை வீழ்த்தி, காம்பவுண்ட் மகளிர் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று, தன் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார் 18 வயதே நிரம்பிய பாயல் நாக். 2026ம் ஆண்டிற்கான உலக வில்வித்தை பாரா தொடர் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்றது.
இதில் காம்பவுண்ட் மகளிர் இறுதிப் போட்டியில் 139 – 136 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார் பாயல். இதன்மூலம், இந்தியா மொத்தம் ஏழு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் உட்பட 16 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்துள்ளது.
ஒடிசாவின் சிறிய நகரில் பிறந்த பாயலின் வில்லியல் பயணம் உறுதியும், கடின உழைப்பும், இலக்கை நோக்கிய தீவிர கவனமும் கொண்ட ஒரு உணர்ச்சிகரமான கதை. பாயலின் தந்தை தினக்கூலி செய்பவர். ஏழ்மை நிலையில் இருந்த பாயல், 8 வயதாக இருக்கும் போது தன் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகிலுள்ள கட்டுமான தளத்தில் தண்ணீர் குட்டையில் கிடந்த ஒரு திறந்த மின்சார கம்பியின் மீது கால் வைத்ததில் மின்சாரம் தாக்கி படுகாயம்அடைந்தார். அவரின் உயிரை காப்பாற்ற வேறு வழியின்றி அவரின் இரு கை, கால்களையும் நீக்க வேண்டியதாயிற்று.
தனது எட்டு வயதிலேயே இரு கை, கால்களையும் இழந்த இச்சிறுமியை பராமரிக்க போதிய வசதியில்லாத நிலையில், பாயலை ஆதரவு இல்லத்தில் சேர்த்துவிட அவரின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், அவரின் உறவினர்கள், பாயலால் சாப்பிடவும், நடக்கவும் முடியாத நிலையை சுட்டிக்காட்டி அவர் மேலும் துன்பப்பட வேண்டாம் என்று சொல்லி அவருக்கு விஷம் கொடுத்துவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால், பாயலின் பெற்றோர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் பாயலை வளர்க்க முன்வந்துள்ளனர்.
“என்னை சுற்றியிருந்த மக்கள் என்னைப்பற்றி பேசியபோது, நான் சிறுவயதாக இருந்தேன். ஆனால், அவர்கள் பேசியது எனக்கு புரிந்தது. அந்த வார்த்தைகளை நினைத்து பார்க்கும்போது, எனக்குள், ஒரு கலக்கமான உணர்வுகள் ஏற்படுகின்றன. எனக்கு எதிராக பேசியவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர்கள் அவ்வாறு பேசியதால்தான், என்னால் தைரியத்தை வரவைத்துக்கொண்டு, முன்னோக்கி சென்று இத்தகைய பெரும் உயரங்களை எட்ட முடிந்தது” என்று பாயல் குறிப்பிடுகிறார்.
தொடக்கத்தில் விளையாட்டு வசதிகளோ, தொழில்முறை பயிற்சிகளோ கிடைக்காத சூழலில் வளர்ந்தவர். ஒருநாள் அவரின் உள்ளூரில் நடைபெற்ற வில்வித்தை போட்டியை பார்த்ததும் அவருக்கு இந்த விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வில்வித்தை ஆர்வத்தை விரைவிலேயே தன் இலக்காக மாற்றிக்கொண்ட பாயல், பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். வில்வித்தை விளையாட்டில் பயன்படுத்தப்படும் வில், அம்பு போன்ற உபகரணங்களை கூட அவரால் வாங்க இயலவில்லை.
பொருளாதார ரீதியாக சிரமமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பழைய அல்லது யாரிடமிருந்தாவது கடன் வாங்கிய உபகரணங்களைக் கொண்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. கல்வி மற்றும் வில்வித்தை பயிற்சியினையும் சமநிலைப்படுத்தியுள்ளார்.இத்தகைய சிரமங்களுக்கிடையே தனக்கான இலக்கில் உறுதியை கைவிடாத பாயல், தினமும் பல மணி நேரங்கள் பயிற்சி செய்து உடல் நிலை மற்றும் மன உறுதியை மேம்படுத்தினார். வில்லியல் என்பது உடல் வலிமை மட்டுமல்ல, அது மன அமைதியும், கவனக்கூர்மையும் தேவைப்படுகிற ஒரு விளையாட்டு என்பதால், போட்டிகளின் போது அழுத்தத்தை சமாளிக்கும் திறனை பாயல் வளர்த்துக் கொண்டார்.
அவரின் கடின உழைப்பின் பலனாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்தாலும், தொடர் பயிற்சியினால் காலப்போக்கில் போட்டிகளில் வென்று பதக்கங்களை குவித்து, தனது திறமையை நிரூபித்தார். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றது அவரின் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
மாநில மற்றும் தேசிய அளவிலான பல போட்டிகளில் பதக்கங்களை வென்று, தன் பெயரை உயர்த்தியுள்ளார். 2025ல் ஜெய்ப்பூரில் நடந்த 6வது தேசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷீத்தலுக்காக வடிவமைத்த அதே வெளியீட்டு அமைப்புடன், பாயலுக்கென ஒரு பிரத்யேக வில் உருவாக்கப்பட்டுள்ளது. மார்பு வெளியீட்டு அமைப்புடன் ஒரு எஃகு சாதனம் பொருத்தப்பட்ட செயற்கைக் கால்களின் உதவியுடன் பாயலால் அந்தச் சிறப்பு வில்லை தூக்க முடிந்தது.
அம்புகளை வேறு ஒருவர்தான் ஏற்ற வேண்டும். பாயலைப் பொறுத்தவரை, ஜம்முவில் அவருடன் வசிக்கும் அவரது 20 வயது சகோதரி பர்சாதான் அதை ஏற்றுகிறார். ‘‘எனக்கு வில்வித்தை பற்றி எதுவும் தெரியாது, அந்தத் திறமைகளில் தேர்ச்சிப் பெற இரண்டு ஆண்டுகள் ஆனது” என்றும் பாயல் குறிப்பிடுகிறார்.
பாயலின் சாதனைகள் அவரின் விடாமுயற்சியின் சான்றாகும். காயங்கள், போட்டி அழுத்தம் மற்றும் நிதி பற்றாக்குறை போன்றவை அவரை சோதித்தாலும், அவற்றை கடந்து செல்லும் மனவலிமை பாயலிடம் வெளிப்படுகிறது. உயர்ந்த நிலைகளில் போட்டியிடுவது கடினமானதே, என்றாலும் பாயல் அதை தைரியமாக எதிர்கொள்கிறார். இன்று பாயல் ஒரு வில்லாளராக மட்டுமல்ல, நம்பிக்கையின் சின்னமாகவும் திகழ்கிறார்.
தொகுப்பு: ஆர்.ஆர்
