நத்தம், மே 4: நத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் புழுக்கம் காரணமாக மக்கள் தூக்கமின்றி தவித்தனர். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் வெப்பத்தின் தாக்கம் அதிகமிருந்தது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். சாலைகளில் போக்குவரத்தின்றி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் நத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை 7.15 மணிவரை சுமார் 45 நிமிடம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மழை காரணமாக நத்தம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவியது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழை மா விவசாயத்துக்கு பயனளிக்கும் என்பதால் விவசாயிகள் சந்தோஷமடைந்துள்ளனர். இது குறித்து மா விவசாயிகள் சிலர் கூறுகையில்,‘‘கடந்தாண்டு போதிய மழை பெய்யாததால் மாமரங்களில் பூ பூப்பது, அதனைத்தொடர்ந்து பிஞ்சு பிடிப்பது குறைந்ததால் மா விவசாயம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பெய்த மழையால் இப்பகுதியில் மா விளைச்சல் கூடுவதற்கு வாய்ப்புள்ளது’’ என்றனர். இதற்கிடையே கோடை விவசாய பணிகளை துவக்க காத்திருந்த விவசாயிகளுக்கு, இந்த மழை பெரும் உதவியாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் தங்கள் நிலத்தில் உழவு பணிகளை துவக்கியுள்ளனர்.
