கும்பகோணம், மே 4: கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயில் மகா மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா நடைபெற்றது. கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோயில் மேல வீதியில் அமைந்திருக்கும் மகா மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை அரசலாற்றில் இருந்து சக்தி கரகம், பால்காவடி, அலகு காவடி, தொட்டில் காவடி, பாடை காவடி மற்றும் அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் இரவில் அம்மன் புஷ்ப பல்லக்கில் இன்னிசை கச்சேரியுடன், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் வானவேடிக்கை முழங்க முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சுந்தரபெருமாள் கோயில் வெள்ளாளர் தெரு, வடக்கு தெரு, புதுத்தெரு, நாட்டாண்மைகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
