×

காங்கிரஸ் பிரமுகரை வீடு புகுந்து தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்: தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்

தக்கலை: காங்கிரஸ் பிரமுகரை வீடு புகுந்து நாம் தமிழர் கட்சினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தம்பதி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். குமரி மாவட்டம் தக்கலை அருகே கோழிப்போர்விளையை சேர்ந்தவர் நெல்சன் (55). இவர் முளகுமூடு பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ளார். இவரது மகன் ஆல்டிரின் பால் நெல்சன் (24). சென்னையில் வக்கீலாக உள்ள இவர் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போடுவது வழக்கம்.

இந்நிலையில் இவரது வீட்டுக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பாடி பில்டர் ராஜா பேரோன், பெண் உட்பட 4 பேர் நேற்று காலை வந்தனர். சமூக வலைத்தள பதிவுகள் குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என நெல்சனிடம் கூறியுள்ளனர். அப்போது அங்கு வந்த ஆல்டிரின் பால் நெல்சனை பார்த்ததும் இவன் தான் பதிவுகள் போடுபவன் அவனை வெட்டுங்கள் என கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரது கையில் வெட்டினர்.

இதனை பார்த்து தடுக்க வந்த அவரது அண்ணன் ஆசீக் பால் நெல்சனை(27) தாக்கியதுடன் தடுக்க வந்த நெல்சன், அவரது மனைவி கலா (51), தாயார் சரோஜா (75), ஆகியோரையும் மிதித்து தாக்கியுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். இதனால் வீட்டில் அலறல் சத்தம் கேட்கவே ஊர்மக்கள் திரண்டனர். இதனை பார்த்த கும்பல் ஓட முயன்றது. ஆனால் பொதுமக்கள் சுற்றிவளைத்தனர்.

இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து அங்கு வந்த தாரகை கத்பர்ட் எம்எல்ஏ, காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களை அறிவுறுத்தினார். மேலும் சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாரையும் அறிவுறுத்தினார். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து ராஜா பேரோனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Naam Tamil Party ,Congress ,Thakkalai ,Nelson ,Kozhipoorvilai ,Kumari district ,Mulakumoodu… ,
× RELATED மூன்று சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்குகள் விவரம்