×

திருப்பரங்குன்றம் அருகே 2 வாலிபர்கள் வெட்டி படுகொலை: வெவ்வேறு இடங்களில் உடல்களை வீசிய 8 பேர் சிக்கினர்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே இருவேறு இடங்களில் 2 வாலிபர்களை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து, முகங்களை சிதைத்து, ஒருவரது உடலை நான்கு வழிச்சாலையிலும், மற்றொருவரது உடலை கண்மாய் பகுதியிலும் வீசிச் சென்ற சம்பவத்தில் 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது சம்பக்குளம். இங்குள்ள நான்கு வழிச்சாலையில் நடுரோட்டில் இளைஞர் ஒருவர், முகம் சிதைந்த நிலையில் உடலில் பல்வேறு வெட்டு காயங்களுடன் நசுங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதேபோல் சம்பக்குளம் – நிலையூர் சாலையில் உள்ள கண்மாய் பகுதியிலும் மேலும் ஒரு இளைஞர் உடலில் வெட்டுக்காயங்களுடன், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலையாகி கிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆஸ்டின்பட்டி போலீசார் இவ்விரு இடங்களுக்கும் சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடங்களை ஏஎஸ்பி அன்சுல் நாகர் தலைமையில் ஆஸ்டின்பட்டி போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இவர்கள் இருவரும் ஒரே கோணத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதும், முகங்களை அடையாளம் தெரியாதவாறு சிதைத்திருந்ததும் தெரிந்தது. சம்பவ இடங்களுக்கு மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை செய்தனர். எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை வேகமடைந்தது. நான்கு வழிச்சாலையில் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தவர் உடல் மீது வாகனங்களும் ஏறிச் சென்றிருந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

தொடர் தீவிர விசாரணையில் இவர் மதுரை ஹார்விபட்டியை சேர்ந்த பத்மநாதன் (20) எனத்தெரிந்தது. இதுதவிர, சம்பக்குளம் – நிலையூர் சாலையில் உள்ள கண்மாய் பகுதியில் கொலையாகிக் கிடந்தவர், மதுரை வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த மவுதன் (29) எனத்தெரிந்தது. கையில் பச்சை குத்தியிருந்த அடையாளத்தை வைத்து, இவர் யார் என போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்டோ டிரைவரான இவர் மீது ஏற்கனவே வாடிப்பட்டி காவல்நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இருவேறு இடங்களில் அருகருகே நடந்துள்ள இந்த கொலைச் சம்பவங்கள் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பேரில் தனிப்படையினரின் தீவிர விசாரணையில் 8 பேர் கும்பல் சிக்கியது. போலீசார் கூறும்போது, ‘‘கொலையான மவுதனுக்கும், நிலையூரை சேர்ந்த அழகு சேதுபதி என்பவருக்கும் இடையே இரு நாட்கள் முன்பு மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

இவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், போதையில் ஏற்பட்ட தகராறு மேலும் கூடுதல் குரோதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது நண்பர் பத்மநாதனுடன் தனியாக வந்த மவுதனை, அழகு சேதுபதி உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து வழிமறித்து கொலை செய்து, முகங்களை சிதைத்து வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றுள்ளனர். 8 பேரையும் பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில் கொலைக்கான முழு காரணம் தெரியவரும்’’ என்றனர்.

Tags : Tiruprangundaram ,
× RELATED இதே வேலைதானாம்… மூதாட்டியை...