கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மிரட்டல் விடுவதால், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பாதுகாப்பு கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, பயங்கர வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதை கருத்தில் கொண்டு, தேர்தலுக்கு பின்பும் அமைதியை நிலைநாட்டுவதற்காக 700 மத்திய கம்பெனி படைகள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் 60 நாள்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜஹாங்கிர் கானின் நெருங்கிய கூட்டாளியான உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் இஸ்ராஃபில், தேர்தல் முடிவுகள் வௌியானதும் தாக்குதல் நடத்துவோம்” என மிரட்டல் விடுத்ததாக பாஜ புகார் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு அளிக்க கோரி தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டாவில் ஏராளமான கிராம மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பாஜ மகிளா மோர்ச்சாவை சேர்ந்த பாத்திமா பீவி கூறுகையில், மே 5ம் தேதிக்கு பிறகு ரத்தக்களரி ஏற்படும் என திரிணாமுல் காங்கிரசார் மிரட்டுகிறார்கள். எனவே, சிஆர்பிஎப் வீரர்களை நிறுத்த வேண்டும் ” என்றார்.
