மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பைனலில் டெய்லர், கேதரீனா இணை

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் நேற்று, அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட், செக் வீராங்கனை கேதரீனா சினியகோவா இணை அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதிப் போட்டி ஒன்றில் அமெரிக்க வீராங்கனை டெய்லர் டவுன்சென்ட் (30), செக் குடியரசு வீராங்கனை கேதரீனா சினியகோவா இணையுடன், பிரான்சின் கிறிஸ்டினா மிளாடெனோவிக், செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருணிக் இணை மோதினர். இப்போட்டியின் துவக்கம் முதல் டெய்லர், கேதரீனா இணை அட்டகாசமாக ஆடி ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதல் செட்டில் சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்த அவர்கள், அந்த செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினர்.

தொடர்ந்து நடந்த 2வது செட்டில், சற்று கடுமையான போட்டி இருந்தபோதும், கடைசியில் அந்த செட்டையும் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் அவர்கள் கைப்பற்றினர். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய டெய்லர், கேதரீனா இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா, டயானா ஸ்னெய்டர் இணையுடன், டெய்லர் டவுன்சென்ட், கேதரீனா சினியகோவா இணை மோதவுள்ளது.

Related Stories: