* ஊக்க மருந்து விவகாரம் ஐடிஏ இயக்குனர் கவலை
நியூயார்க்: ‘இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள், ஊக்க மருந்து உட்கொள்ளும் சம்பவங்கள் அதிகளவில் நடப்பது, கவலை அளிக்கிறது’ என, சர்வதேச ஊக்க மருந்து சோதனை அமைப்பு (ஐடிஏ) இயக்குனர் பெஞ்சமின் கோஹென் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘வரும் 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்காக, அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் உட்பட பல்வேறு நிர்வாக நடைமுறைகள் சரி செய்யப்பட வேண்டும். இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள், முன்கூட்டியே கிடைக்கும் தகவல்களால், ஊக்க மருந்து சோதனைக்கு வராமல் ஓடி விடுகின்றனர்’ என்றார்.
* பதில் கூற தேவையில்லை ரியான் பராக் ஆவேசம்
ஜெய்ப்பூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின்போது, ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், வீரர்கள் அமரும் ஓய்வறையில் இருந்தபோது இ-சிகரெட் புகைத்ததாக புகார் எழுந்து சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலானது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரியான் பராக், 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் ரியான் பராக் கூறுகையில், ‘என் மீது விமர்சனங்கள் வைப்போருக்கு பதில் கூற வேண்டிய அவசியம் கிடையாது. எனது அணிக்கு வெற்றி தேடித்தருவது மட்டுமே என் வேலை’ என்றார்.
* ஜேமிசன் மீது திடீர் நடவடிக்கை
ஜெய்ப்பூர்: டெல்லி அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, டெல்லி அணியின் கைல் ஜேமிசன் வீசிய பந்தில் 4 ரன்னில் கிளீன் போல்டானார். அதையடுத்து, வைபவ் எதிரே ஓடி வந்த ஜேமிசன், ஆக்ரோஷமாக துள்ளிக் குதித்து சத்தமிட்டார். வெறும் 15 வயதே ஆன வைபவ் முன், ஜேமிசன் அப்படி செயல்பட்டது, கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க செய்தது. இந்நிலையில், ஜேமிசனுக்கு ஒரு தகுதிக் குறைப்பு புள்ளியை, ஐபிஎல் நிர்வாகம் வழங்கி உள்ளது. ஐபிஎல் விதிகளை மீறியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
